Monday, February 7, 2011

திருக்குறள் காட்டும் வாழ்வியல் நீதிகள்


திருக்குறள் காட்டும் வாழ்வியல் நீதிகள்



முனைவர் அ. பரிமளகாந்தம்
இணைப் பேராசிரியர்
அகராதியியல்
பி.எஸ். தெலுங்குப் பல்கலைக்கழகம்
ஐதராபாத் – 500 004


முன்னுரை

சமுதாயமாகச் சேர்ந்து வாழும் மனிதர்கள் நல்வழியில் நடக்க நீதிகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் ஆன்றோர்கள் நல்கியுள்ளனர். இலக்கிய வளம் நிறைந்த மொழிகளில் இலக்கியங்களும் எண்ணற்ற எண்ணிக்கையில் உள்ளன. அவ்விலக்கியங்கள் உள்ளத்தைத் திறப்பதற்கும், அதைத் திருத்திச் செம்மைப் படுத்துவதற்கும், தவறுகளைப் போக்கும் வன்மை உண்டாகுவதற்கும், நல்லனவற்றை மேற்கொள்வதற்கும், அவற்றைப் பிறர்க்கு எடுத்துக் கூறுவதற்கும், பிறரை நல்வழியில் செலுத்துவதற்கும் பயன்பட வேண்டும் என்கிறார் வைகவுண்ட் மன்லே (Selected Essays From The Writing Of Viscount Manlay P.51). அத்தகைய இலக்கியங்களை நல்கிய சான்றோர்களில் ஒருவர்தான் தெய்வப்புலவர் என்று மக்களால் கொண்டாடப்படும் திருவள்ளுவர். அன்னாரின் திருக்குறளில் சொல்லப்படாத செய்திகளே இல்லை எனலாம்.


நோக்கம்


இந்தக் கட்டுரையின் நோக்கம் வள்ளுவர் நல்கிய வாழ்வியல் நீதிகளை ஆராய்ந்து பகுத்துக் கூறுவதாகும். இக் கட்டுரையில் வள்ளுவர் கூறிய வாழ்வியல் நீதிகளாக, கல்வியால் ஏற்படும் நன்மை, நீத்தார் பெருமை, இல்வாழ்க்கை நெறி, இல்வாழ்வான், இல்லாளுக்கு இருக்கவேண்டிய பண்புகள், விருந்தோம்பலின் சிறப்பு, பொதுவாக மனிதனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள் எனப் பல நீதிகள் பகுத்துக் கூறப்பட்டிருக்கிறது. வள்ளுவர் கூறிய வாழ்வியல் நீதிகள் தமிழ்க் குடிமகன் ஒருவனுக்கு மட்டுமன்றி, உலகில் மனிதனாகத் தோன்றிய அனைவருக்கும் உரிய வாழ்வியல் நீதிகளாக அமைந்திருப்பதே திருக்குறளின் சிறப்பாகும்.

கல்வியின் சிறப்பு

உலகில் பிறந்த அனைவருக்கும் பொதுவாக, ஆரியம் கூறும் சாதி, இன வேறுபாடு எதுவுமின்றி அனைவரும் சமமானவர்களே என்பதைப் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையான்’ என்ற குறள் மூலம் வெளிப்படுத்துகின்றார். விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் உறுதிப் பொருளான கல்வியால் ஒருவன் அடையும் சிறப்புகளையும் அக் கல்வியைக் கல்லாதவன் மேல் குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் கீழ் குலத்தில் பிறந்தவனாகவே கருதப்படுவான் என்றும், கீழ் குலத்தில் பிறந்தவன் கல்வி கேள்விகளில் சிறந்தவனாக இருப்பின் கல்லாத மேல்குடிப் பிறப்பானைக் காட்டிலும் உயர்ந்தவனாகவே கருதப்படுவான் என்பதைக் கீழ்கண்ட குறளில் சொல்கிறார் திருவள்ளுவர்


“மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு” (குறள் 409)


கல்வியின் பெருமையைக் கூறிய திருவள்ளுவர் வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்றுரைத்து சமூகத்தில் மேல் தளத்தில் இருப்பவனனாலும், கீழ்மட்ட நிலையில் இருப்பவனனாலும், தான் வாழும் உலகுடன் ஒத்துப் பொருந்தி வாழத் தெரியாதவன் எத்தனை உயர்ந்த கல்வியைக் கற்றவனாகவே இருந்தாலும் கல்லாதவனாக, அறிவற்றவனாகவே மதிக்கப்படுவான் என்பதை,

“உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்” (குறள் 140)

என்ற குறள் மூலம் விளக்குகிறார்.

அவ்வாறு கற்ற கல்வி பல்லோர் முன்னிலையில் மதிப்பையும், கௌரவத்தையும் உயர்த்துவதுடன், பெற்ற தாய் அத்தகு மகனைப் பெற்றதற்காகப் பெறும் மக்ழ்ச்சியைப் பின் வரும் குறள் மூலம் மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டதாய்” (குறள் 70)


நீத்தார் பெருமை

திருக்குறளின் அடிப்படைத் தத்துவமே அறம், பொருள், இன்பம் மூலமாக வீடு பேற்றினை அடைவதுதான். அத்தகைய வீடு பேற்றை அடைய இரு வகை அறங்கள் இருப்பதாகக் கூறுகிறார் திருவள்ளுவர். ஒன்று இல்லறம், இன்னொன்று துறவறம். இவ்விரண்டு அறங்களிலும் இல்லறமே மிகச் சிறந்தது என்றும், இல்வாழ்வை மேற்கொண்டு அறநூல் செப்பிய வழியில் வாழ்ந்து சிறந்த மனைவியுடன் நன்மக்களைப் பெற்று தருமவழியில் நடந்து, வீடுபேற்றினை அடைவதற்காக துறவறம் மேற்கொள்வதையே சிறந்த அறமாக வள்ளுவர் கருதுகிறார் என்பதைக் கீழ் கண்ட குறள் உணர்த்துகிறது.

“இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு” (குறள் 23)


மேலும் வயதால் ஒருவரைப் பெரியவர் என்று கருத முடியாது என்றும், அரிய செயல்களைச் செய்பவர் வயதில் சிறியவராக இருந்தாலும், பெரியவராக மதிக்கப் பெறுவர் என்றும் அவ்வாறு செயற்கரிய செயலை செய்ய இயலாதவர் வயதில் பெரியவராக இருந்தாலும் சிறியவராகவே கருதப் படுவர் என்றும் குறள் 26 மூலம் உணர்த்துகிறார் திருவள்ளுவர்.

“செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலாக தவர்” (குறள் 26)

இல்வாழ்க்கை

வீடு பேற்றை அடைய துறவறத்தை விட மிகச் சிறந்தாகக் கருதப்படும் இல்வாழ்க்கை, தற்காத்துக் கொண்டு தற்கொண்டானையும் பேணிப் பாதுகாக்கும் இல்லாளையும், இவன் தந்தை என்னோற்றான் கொல் என்று சொல்லுமளவுக்கு கல்விக் கேள்விகளில் சிறந்த மகனையும் பெற்று பிறன் பழிப்பு இல்லாத வாழ்க்கையே பண்பும் பயனும் நிறைந்தகாக இருக்கும் என்கிறார் திருவள்ளுவர். இதையே,

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” (குறள் 45)

“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று” (குறள் 49)

என்ற குறள்கள் மூலம் விளக்குகிறார்.

இல்வாழ்வான் இல்லாளிடம் இருக்க வேண்டிய பண்புகள்

இல்வாழ்வான் கடமையைக் கூறப்போந்த திருவள்ளுவர் அறநெறியில் அதாவது பழி பாவத்திற்கு அஞ்சி சம்பாரித்த செல்வத்தைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டு வந்தால் அவன் சந்நிதி என்றும் நிலைத்து நிற்பது மட்டுமின்றி அழிந்து போகாமலும் இருக்கும் என்பதை,

“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள் 44)

இல்வாழ்க்கையை மேற்கொண்ட ஆண்மகன் தான் நல்வழியில் ஈட்டிய பொருளை எவ்வாறு பயன்படுத்தினால் சந்ததி நிலைக்கும் என்று 44 வது குறளில் சொல்லிய வள்ளுவர் அத்தகைய ஆண்மகனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அமையும் மனைவி எத்தகையவளாக இருந்தால் தன்னையொத்த மனிதர்களின் முன் தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்பதையும் கீழ்கண்ட குறளின் மூலம் விளக்குகிறார் திருவள்ளுவர்

“அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று” (குறள் 150)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறள் மூலம் இன்ன அறவழியில் நடக்கவேண்டும், இன்னின்ன நற்காரியங்கள் செய்யவேண்டும், என்று வரையறுத்துக் கொள்ளாவிட்டாலும் மனைவியிருக்கப் பிறருக்குச் சொந்தமான பெண்ணை நினையாமலாவது இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்.

அவ்விதம் அறநெறியில் பிறன் மனை விழையாது இல்வாழ்வு மேற்கொண்ட ஆண் மகனுக்கு அவனைப் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தும் நற்பண்புகளுக்கு உறைவிடமான கற்பு எனச் சிறப்பித்துக் கூறப்படும் நிலைகுலையா மனஉறுதி கொண்ட பெண் மனைவியாக வாய்க்கப் பெறாவிட்டால் ஏறுபோல் பீடு நடை போடமுடியாது என்பதைப்.

“புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை” (குறள் 59)

விருந்தோம்பல்

தமிழர்களின் இன்னும் சொல்லப் போனால் இந்திய மண்ணின் தலையாய மிகச் சிறந்த குணம் வீட்டிற்கு வந்த விருந்தினை மனம் கோணாமல் உபசரித்து வழியனுப்புவது.

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு” (குறள் 86)

வந்த விருந்தினரை உபசரித்து அனுப்பிவிட்டு வரும் விருந்தினரையும் எதிர்பார்த்திருந்து அழைத்துப் போற்றுவான். வானத்தவர்க்கு நல்ல விருந்தினராகச் சென்று சேருவான் வீட்டிற்கு வந்த விருந்தினரை நன்முறையில் உபசரிக்காவிட்டால் அந்த விருந்தினரின் நிலை குறித்து

“மோப்பக் குழையும் அனிச்சம் முகத்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (குறள் 90)

எல்லா மலரினும் மென்மையானது அனிச்சம்பூ. அப்பூவை முகர்ந்து பார்த்தால் வாடி விடும். ஆனால் வரும் விருந்தினர் அப்பூவினும் மென்மையானவர் என்றும், அவ்விருந்தினரை விருந்தோம்பல் செய்வான் முகம் மாறி நோக்கினாலும் அவ்விருந்தினர் வாடி விடுவார்கள் என்று விருந்தோம்பல் என்ற வாழ்வியல் கூற்றின் மென்மையை அனிச்ச மலருக்கு ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

இவ்வாறாக இல்வாழ்க்கையில் வாழ்வியல் கோட்ப்பாட்டைக் கூறும் வள்ளுவர் தனிமனிதனுக்கென்று சில வாழ்வியல் நெறிகளையும் கீழ்கண்ட விதமாகக் கூறுகிறார்.

இன்னா செய்யாமை

ஒருவன் தான் செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்கவேண்டும் என்றும் ஒருவருக்குத் முற்பகலில் தீங்கு செய்தால் பிற்பகலிலேயே அத் தீங்கை அனுபவிக்க நேரும் என்ற நீதியையும் வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்” (குறள் 319)

ஒருவன் தனக்கு இன்னா செய்யும் போது திரும்பி ‘did for tat’ என்று பழிக்கு பழி வாங்காமல் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்ற பைபிளின் பண்பைப் போல தீமை செய்தவன் நாணும் விதமாக நன்மை செய்து விடவேண்டும் என்று

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்” (குறள் 314)

கூறுகிறார்.

நன்றி மறவாமை.

உலகமயமாதலால் உலகம் சுருங்கியதென்னவோ உண்மை. உலகம் சுருங்கியது போல மனிதனின் மனமும் இன்றைய சூழலில் சுருங்கிவிட்டது. . அண்டைஅயலாருடன் எவ் வகையான உறவும் இன்றி மாடமாளிகைகளாகக் கட்டப்பட்ட ப்ளாட்டுகளில் மனிதன் தனித்து விடப்பட்டான் என்பதும் உண்மைதான். தனியான மனிதனிடம், இயல்பாக இருக்கவேண்டிய மனிதநேயமே இல்லாமல் போன பிறகு செய்நன்றி போன்றறவற்றைப் பற்றி யோசிக்க மனிதனுக்கு நேரம் எங்கே இருக்கிறது? ஆனாலும் உரிய காலத்தில் செய்யப்பட்ட உதவி கடுகளவே யானாலும் மறந்து விடாமல் நன்றியுடன் இருக்கவேண்டும் என்ற வாழ்வியல் கோட்பாட்டைக் கீழ்கண்ட குறள் மூலம் விளக்குகிறார்

“தினைத்துணை நன்றிசெயினும் பனைத் துணையாகக்
கொள்வர் பயன் தெரிவர்” (குறள் 104).


புறங்கூறாமை

மனிதனுக்கு மனிதன் தீங்கு செய்யாதது மட்டுமல்ல; செய்த தீமையை மன்னித்து விடவேண்டும் என்று கூறும் வள்ளுவர் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது புறம் கூறக் கூடாது என்றும் கூறுகிறார். அறம் என்ற சொல்லை வாயினால் கூட சொல்லாதவனாக இருந்தாலும் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது பேசாமல் இருந்தால் அதுவே சாலச் சிறந்தது என்பதை கீழ்கண்ட குறள் மூலம் விளக்குகிறார்.

“அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது” (குறள் 181)

புறங்கூறக்கூடாது என்று போதித்த வள்ளுவர் பேசும் மொழிகளும் பயனுடையதாக இருக்கவேண்டும் என்றும் காமசோமா என்று பயனற்ற சொற்களைச் சொல்லக்கூடாது என்று.

“சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்” (குறள் 200)

என்று அறிவுரை கூறுகிறார்.

இனியவை கூறல்

மனிதனின் வாழ்நாள் சிறிது. அதில் சாதிக்கவேண்டியவை எண்ணற்றவை.. கூடி வாழும் மனிதர்களுடன் நல்லுறவு இருந்தால் தான் வாழ்க்கையில் சில நல்ல காரியங்களைச் சாதிக்கமுடியும். நல்லுறவு கொள்ள நன்மொழி பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்றும் புறங்கூறக் கூடாது; பயனற்ற சொற்களைப் பேசக் கூடாது என்று திருவள்ளுவர் இனிய மொழிகளையே பேசவேண்டும் என்றும், நல்ல கனிந்த கனி கையிலிருக்கும்போது வெக்காய் போன்ற கொடூரமான வார்த்தைகளை ஏன் பேசவேண்டும் என்று கேட்கிறார்,

“இனிய உளவாக இன்னாதல் கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” (குறள் 100)
என்கிறார்.

மனத்தூய்மை

பிறருக்குத் தீங்கு செய்யாமை மட்டுமல்ல; இன்சொல்லையே பேச வேண்டும் என்று கூறும் வள்ளுவர் மனமும் எவ்வித களங்கமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும். அவ்விதம் இருந்தலே அறம் என்றும் மனத்தூய்மையற்ற செயல்கள் யாவும் ஆரவாரச் செயல்கள் என்றும் கீழ்கண்ட குறளின் மூலம் விளக்குகிறார். .

“மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற” (குறள் 34)

ஒருவன் தன் மனத்தின் கண் குற்றம் இல்லாதவனாக இருத்தல் வேண்டும். அதவே அறன் எனப்படுவதாகும். மனத்தூய்மையின்றிச் செய்யப்படும் பிற அனைத்துமே ஆரவாரத்துடன் செய்யப்படுபவனவேயாகும்.

முடிவுரை

பிறப்பால் அனைவரும் சமம் என்று கூறி நீத்தார் பெருமை இல்வாழ்க்கை, இல்வாழ்வான், இல்லாள் இவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களையும், ஒவ்வொரு மனிதனிடம் இருக்கவேண்டிய குணங்களாக இனியவை கூறல் இன்னா செய்யாமை, நன்றி மறவாமை, புறங்கூறாமை, விருந்தோம்பல், மனத்தூய்மை போன்றவற்றை வாழ்வியல் நீதிகளாக விளக்கியுள்ளமை இக் கட்டுரையின் மூலம் விளங்குகிறது.

துணை நூல்கள்
1. பாரதியார், பாரதியார் கவிதைகள், வானதி பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு, 1883, ப. 39.
2. மதுரைத் தமிழ் நாகனார், திருவள்ளுவ மாலை, திருக்குறள் - பரிமேலழகர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1964, ப. 408.
3. ந. முருகேச பாண்டியன், "திருவள்ளுவர் என்ற மனிதர்", வள்ளுவம் இதழ் (வைகாசி - ஆனி) திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மே - 2000.
4. மு. கருணாநிதி, "திருக்குறள் என் சிந்தனையை நெய்திருக்கும் செந்நூல்", கோட்டம் முதல் குமரி வரை, குமரி முனை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மலர், ப. 8.
5. மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி, கழக வெளியீடு, சென்னை, பாடல் வரிகள், 778-782.
6. புறநானூறு, கழக வெளியீடு, சென்னை, பாடல் எண். 235.
7. சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, பாரி நிலையம், சென்னை, எட்டாம் பதிப்பு, 1987, ப. 306.
8. குன்றக்குடி அடிகளார், வள்ளுவத்தின் சமயவியல், வள்ளுவம் இதழ் (பங்குனி - சித்திரை), திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மார்ச் 1999, ப. 11

Tuesday, February 1, 2011

முனைவர் வா.செ. குழந்தைசாமியின் அறிவியல் தமிழ்ப்பணி


முனைவர் வா.செ. குழந்தைசாமியின் அறிவியல் தமிழ்ப்பணி



முனைவர் ஆ. அஜ்முதீன், எம்.ஏ., பி.எட்., எஸ்.எல்.இ.டி., பிஎச்.டி.,
முதுகலை தமிழாசிரியர்,



மனித இனத்தின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உந்துச​க்தியாக விளங்குவது தாய் மொழியாகும். தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது தமிழ்மொழியாகும். தமிழரின் நிலை உயர வேண்டுமானால் புத்தம் புதிய கலைகள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழும் இந்நூற்றாண்டின் செயற்பாடுகளைத் தமிழ்மொழி தன் வாயிலாக விளக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பக் கருத்துகளைத் தமிழ்மொழி ஏற்றாக வேண்டும் என்ற புதிய சிந்தனை முகிழ்த்துள்ளது. அதன் அடிப்படையில்தான் அறிவியல்தமிழ் என்ற புதிய நோக்கு பிறந்துள்ளது. இவ்வறிவியல்தமிழ் வளர்ச்சிக்கு முனைவர் வா.செ. குழந்தைசாமி ஆற்றியுள்ள பணிகள் குறித்து இவ்வாய்வுக் கட்டுரையில் காணலாம்.
கலைச்சொல்லாக்கம்
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தமிழ் ஏற்க வேண்டும். தமிழில் அறிவியல் நூல்கள் எழுதப்பட வேண்டும். தமிழ் வழி அறிவியல் கற்பிக்கப்பட வேண்டும் என்பன போன்ற செயல்பாடுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.
இது அறிவியல் யுகம். அறிவியலின் பாதிப்பு, இந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களிடையேயும் காணப்படுகிறது. அவர்தம் வாழ்க்கையிலும், கல்வி முறைகளிலும் அறிவியல் கருத்துகளும் கண்டுபிடிப்புகளும் மிக இன்றியமையாத இடத்தைப் பெற்றுவிட்டன எனலாம். நாள்தோறும் அறிவியல் சொற்களும் கருத்துகளும் பல்கிப்பெருகி வருகின்றன. அவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்மொழிக்கு ஒலி, சொல், சொற்றொடர் ஆகிய பல நிலைகளிலும் ஒரு தனி அமைப்பு தேவை எனலாம். ஏற்கனவே உள்ள முத்தமிழோடு இத்தமிழையும் சேர்த்து இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல்தமிழ் என நான்கு தமிழாகக் கொள்ளலாம். முனைவர் குழந்தைசாமி அறிவியல் தமிழையும் கல்வித் தமிழையும் ஒன்றாகவே கருதுகிறார்.
கலைச்சொல்லாக்க முயற்சி தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உருவாக்கப்பட்ட கலைச்சொல் தொகுப்புகளின் பட்டியலும், அவற்றில் இடம் பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையும் கொண்ட கட்டுரை ஒன்றை 'கலைச்சொல்லாக்க முயற்சி இதுவரை' என்ற தலைப்பில் முனைவர் இராதா செல்லப்பன் எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் மறித்துவரும் சொற்களை நீக்கி இரண்டு இலட்ச​த்திற்கும் அதிகமான சொற்கள் உருவாக்கப் பட்டிருப்பதாக அவரது பட்டியலிருந்து தெரிய வருகிறது. இக்கட்டுரையின் முடிவாக கலைச்சொற்களை உருவாக்கும் முறைமையில் பொதுவான கொள்கைகள் வகுக்கப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.
அறிவியல்தமிழ் கலைச்சொல்லாக்கம் 1830‍இல் தொடங்கிப் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வந்தாலும், அண்மைக்காலத்தில் தான் புது விழிப்புத்தோன்றி இப்பணி செவ்வனே நடைபெறத் தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள அறிவியல் தமிழாக்க முயற்சிகளை முனைவர் குழந்தைசாமி சிறந்தன என்று கருதுகிறார். இருப்பினும் கலைச்சொற்களை உருவாக்குவதற்கென்று சில நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டுமென்ற சிந்தனையுடைய வராகவும் அவர் விளங்குகிறார். இதனை,
"செய்த அளவிற்கு இப்பணிகள் சிறந்தன. இந்நூல்கள் படிப்போர்க்குப் பயன் தருவன. இந்தப் பின்னணியில் நாம் கருத வேண்டியன‌ பின்வருமாறு :
*துறைச் சொற்களை உருவாகுவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளனவா?
*இவ்வெளியீகளில் பயன்படுத்தப்பட்டுள்ள துறைச்சொற்கள் முன் கூட்டியே வகுக்கப் பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் அமைந்தவையா?
*இதுவரை, பொதுவான, வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் எவையும் இல்லையெனில் கடந்தகால வெளீயீடுகளின் ஆசிரியர்கள் துறைச்சொற்களைப் படைத்த முறைகளிலிருந்து அவர்கள் அனுபவத்தில் இருந்து, நாம் சில நெறிமுறைகளை வகுப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றனவா?
*துறைச்சொற்களை உருவாக்குவதற்கான அப்படிப்பட்ட நெறிமுறைகள் தேவையா?
என்று அவர் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது.

அவரவர் விருப்பிற்கும் புலமைக்கும் ஏற்ற வகையில் கலைச்சொற்கள் அமைக்கப்படுவதால் அவை வரைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக கலைச்சொல் என்பது, "சாஸ்திரம், விஞ்ஞான‌ம் என‌ வ‌ழ‌ங்க‌ப்பட்ட‌ Science இன்று அறிவிய‌ல் என‌த் தரப்படுத்த‌ப்ப‌ட்டு வ‌ழ‌ங்க‌ப் ப‌டுவ‌தைப் போல‌வே க‌லைச் சொற்க‌ள் உருவாக்க‌ம் குறித்த‌ வழிகாட்டல் ப‌ணியினை முனைவ‌ர் குழந்தைசாமி மேற்கொண்டுள்ளார். இன்றுவரை துறைச்சொற்களை உருவாக்குவதற்கு அவற்றை ஒலிப்பெயர்ப்பதா, மொழிபெயர்ப்பதா, புதிய‌சொற்களைப் படைப்பதா என்பதில் நமக்குள் ஒரு தெளிவில்லை. ஒலிப்பெயர்ப்புக்களில், 12 உயிர், 18 மெய், 1 ஆய்தம் இவற்றின் அடிப்படையில் அமைந்த ஒலிகள் நமக்குப் போதுமா, போதாவா என்பதில் இன்று நம்முள் ஒத்த கருத்தில்லை. எல்லோருடைய ஒருங்கிணைந்த பணியால் உருவாக்கப்பட வேண்டியது கலைச்சொல்லாக்கம் என்ற தெளிவானக் கொள்கையுடையவர் என்பது தெளிகிறது. அவ‌ர் 1. கலைசொற்க‌ள் உருவா‌க்கும் வ‌ழிக‌ள், 2. க‌லைச்சொல் அக‌ராதிக‌ள் வெளியிடும் முறைக‌ள், 3. க‌லைச்சொல் வ‌ங்கி அமைக்கும் வழிமுறைக‌ள் ஆகிய‌ மூன்று செய‌ல்பாடுக‌ள் வ‌ழி இப்ப‌ணிக்கான‌ க‌ருத்துக‌ளை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு :
கலைசொற்க‌ள் உருவ‌க்கும் வ‌ழிக‌ள்
"1. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சொற்களை இன்றைய தேவைக்கேற்பப் பொருள் கொண்டு பயன்படுத்துதல்.
2. தற்கால இலக்கியங்களிலிருந்து சொற்களைப் பயன்படுத்துதல்.
3. பேச்சுமொழியிலிருந்து தகுந்த சொற்களை எடுத்தாளல்.
4. தொடர்புள்ள பிறமொழிச் சொற்களைக் கடன் பெறல்.
5. பிறமொழித் துறைச்சொற்களை மொழிபெயர்த்தல்.
6. புதுச்சொற்களைப் படைத்தல்.
7. உலக வழக்கை அப்படியே ஏற்றுக்கொள்ளல்"1
இவையே கலைச்சொற்களை உருவாக்க‌ அவர் கூறும் வழிமுறைகளாவன. மேலும், அறிவியல்தமிழாக்கத்தில் நாம் உருவாக்க வேண்டிய துறைச்சொற்கள், குறியீடுகள், சூத்திரங்கள் ஆகியவற்றை நான்கு வகையினவாகப் பாகுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறார். அவை,
1. மாற்றம் எதுமில்லாது உலக அளவில் பொதுமையானவையாகப் பயன்படுத்த வேண்டிய குறியீடுகள், சூத்திரங்கள்.
2. மாற்றமில்லாது அப்படியே ஒலிபெயர்த்துப் பயன்படுத்தப்பட‌ வேண்டிய சொற்கள்.
3. மாற்றமில்லாது ஒலிபெயர்ப்பதா, அல்லது புதிய சொல்லை உருவாக்குவதா என்ற கருத்து வேறுபாடுகட்கு இடந்தரும் சொற்கள்.
4. புதிய சொற்கள் உருவாக்கப்பட்டேயாக வேண்டிய சொற்கள்2
என்பனவகும். இவ்வழிகாட்டல்களின் படி கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டால் அறிவியல் தமிழ் வளர்ச்சி செம்மையடையும்.
2. க‌லைச் சொல் அக‌ராதிக‌ள் வெளியிடும் முறைக‌ள்
கலைச்சொல் அகராதித் தொகுப்புகள் வெளியிடும் முறையை இரு அடிப்படைப் பிரிவுகளாகக் முனைவர் குழந்தைசாமி நெறிபடுத்தியுள்ளார். அவை,
"பகுதி (1):அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை, சமுதாய இயல்கள், கலை, மொழி, இலக்கியம், சட்டம், ஆட்சி போன்ற பெரும் பிரிவுகளை எடுத்து, இந்த ஒவ்வொன்றுக்கும் பொதுவான சொற்களைத் தனித்தனித் தொகுதிகளாகத் தயார் செய்யலாம்.3

பகுதி (2): பகுதி (1)இல் உள்ள பெரும் பிரிவுகள் ஒவ்வொன்றின் கீழ்வரும் கிளைப் பிரிவுகளுக்கான கலைச்சொற்கள் இப்பிரிவில் இடம்பெறும். சான்றாக, பொறியியல் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால், அனைத்துப் பொறியியல் தொழில் நுட்பங்களுக்கும் பொதுவான சொற்கள் பகுதி (1)‍-லும், குடிமைப்பொறியியல், மின்சக்திப் பொறியியல், எந்திரப்பொறியியல் போன்ற தனித்தனிப் பிரிவுகட்கான கலைச்சொற்கள் அந்தந்த தலைப்புகளில் பகுதி (2)‍-லும் இடம் பெறலாம்." என்பனவாகும். இந்த வழிகாட்டலின் அடிப்படையில் கலைச்சொல்லாக்கப்பணி நடைபெற்றால் பொருட்செலவும் கால விரையமும் குறையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
3. க‌லைச்சொல் வ‌ங்கி அமைக்கும் வழிமுறைக‌ள்
இந்தியத் துணைக் கண்டத்திலேயும் வெளியிலேயும் நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனி அலுவலர்கள் தொகுத்துள்ள எல்லா கலைச்சொற்களையும் திரட்ட வேண்டும். இதற்கெனத் தனித் தலைமையகம் அமைக்கப்பட வேண்டும் என்று முனைவர் குழந்தைசாமி கருதுகிறார். அதற்கு 'கலைச்சொல் வங்கி' என்று பெயரிட வேண்டுமென்றும் குறிப்பிடுகிறார். அத்தலைமையகத்தில் சேர்ந்த கலைச்சொற்கள் அனைத்தையும் கணிப்பொறியில் தேக்க வேண்டும். அக்கலைச்சொற்கள், தரப்படுத்தப்பட்டவை, தரப்படுத்தப்படாதவை என்ற இரு பிரிவுகளாக வகைபடுத்தப்பட வேண்டும். அக்கலைச்சொல் வங்கி அனைவருக்கும் இணையம் போன்ற இணைப்புச் சாதனம் வழி பரவலாக்கப்பட வேண்டும்.
முனைவர் குழந்தைசாமி கூறுவதன் அடிப்படையில் கலைச்சொல் வங்கி அமைக்கப்படுமானால் கலைச்சொல்லாக்கப் பணியின் முழுமையான பயனை எல்லோரும் பெறலாம். இதனால் எவர் வேண்டுமானாலும் தேவையான துறைச்சொற்களைப் பெறமுடியும். மேலும், அறிவியல் தமிழாக்க நூல்கள் செம்மையடைய வாய்ப்புக்களும் உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் இதுவரை உருவாகியுள்ள கலைச்சொற்களை அறிந்துகொள்ள வழியும் உள்ளன.
எழுத்துச் சீர‌மைப்பு
வ‌ள‌ர்ந்து வ‌ரும் அறிவிய‌ல் தொழில்நுட்ப‌ வ‌ள‌ர்ச்சிக்கேற்ப‌ மொழி எல்ல‌ நிலைக‌ளிலும் வளைந்து கொடுத்து வ‌ள‌ர‌ வேண்டிய‌ கால‌ச்சூழ‌ல் ஏற்ப‌ட்டுள்ள‌து. அறிவியல்தமிழின் வளச்சிக்குத் தமிழ்மொழியின் வரிவடிவ மாற்றம் அவசியமான தேவையாக அறிஞர்கள் பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. அவ்வறிஞர்கள் வரிசையில் அறிவியல் அறிஞரான முனைவர் குழந்தைசாமியும் எழுத்து சீரமைப்பு குறித்து சிந்தித்திருப்பது நோக்கத்தக்கது.
தமிழ் வரிவடிவத்தில் மாற்றமும், திருத்தமும் பண்டைக்காலம் முதல் இடம் பெற்று வந்திருக்கின்றன. முனைவர் குழந்தைசாமியின் எழுத்துச்சீரமைப்பு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் வளர்ந்து வந்துள்ள எழுத்துச்சீரமைப்புச் சிந்தனைகளைத் தொகுத்துக்கூறி அவற்றின் அவசியத்தையும் விளக்குவதாகும். மேலும், அவரது பரிந்துரைகள் சிலவும் அமைந்துள்ளன. இதில் அவருக்கே உரிய சீரிய சிந்தனைகளும், அணுகுமுறைகளும் காணப்படுகிறது. அவரின் எழுத்துச் சீரமைப்பு, “1. மெய்யெழுத்துக்களின் வடிவ மாற்றம், 2. உயிர்மெய் எழுத்துக்களின் வடிவ மாற்றம், 3. கிரந்த எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதும் மாற்றம்” என்ற முறைகளில் அமைந்துள்ளது.
1. மெய்யெழுத்துக்களின் வடிவ மாற்றம்.


மெய்யெழுத்துக்கள் உயிர்மெய் அகர வரிசை பதினெட்டிற்கும் உள்ள வேறுபாடு மெய்யெழுத்துக்களின் மேல் இடப்படும் புள்ளி மட்டுமே ஆகும். அப்புள்ளியை க,ங,ச,.....ற,ன முதலியவற்றின் வலது புறத்தில் இட்டால் மற்ற உயிர்மெய் வரிசைகளைப் போல ஒரே சீர்மை ஏற்படும். இதனால் க,ங,ச,.....ற,ன என்ற பதினெட்டு வடிவங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். தனியே க்,ங்,ச்,....ற்,ன். என்ற பதினெட்டு வடிவங்கள் தேவையில்லை.
2 உயிர்மெய் எழுத்துக்களின் வடிவ மாற்றம்.
உயிர்மெய் எழுத்துக்கள் உயிரும் மெய்யும் இணைந்த கூட்டொலிகளால் ஆனவை. இக்கூட்டொலிகளின் வடிவங்களில் சிலவரிசைகளில் ஒரு சீர்மையும் சிலவரிசைகளில் சீர்மைக்குறைவும் காணப்படுகின்றன. அதாவது உயிர்மெய்யில் அகர வரிசைத் தொடங்கி ஒளகார வரிசை வரையிலுள்ள 12 வரிசைகளில், இகர, ஈகர, உகர, ஊகாரம் ஆகிய நான்கு வரிசைகளில் சீர்மைக்குறைவு காணப்படுகிறது. எவ்வாறெனில், உயிர்மெய் எழுத்துக்களில் கா, கெ, கே, கை, கொ, கோ, கெள இவற்றில் குறியீடுகள் வலதுபுறம். இடதுபுறம் ஆகிய இருபுறங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அஃதவது மெய்யோடு பிணையாமல் தனியகவே இருக்கின்றன. அதுவே கி, கீ, கு, கூ இவற்றில் குறியீடுகள் பிணைந்து காணப்படுகின்றன. மற்ற வரிசைகளில் பயன்படுத்தப்படும் (துணைக்கால்,கொம்பு...) நான்கு குறியீடுகள் போலவே இவற்றிற்கும் தனியான குறியீடுகள் பயன்படுத்தாமல் இந்நான்கு வரிசைக்கும் 72 குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன. நான்கு குறியீடுகளால் அறிய வேண்டிய எழுத்துக்களை 72 குறியீடுகளால் அறிய வேண்டிய சிரமம் உள்ளதை எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே, இங்கு சீர்திருத்தம் தேவை என்பதை உணர முடிகிறது. இச்சீர்திருத்தத்திற்கு முனவர் குழந்தைசாமி அவர்கள் செயல்பாடுகள் தெ.பொ.மீ., மு.வ., கி.வா.ஜகன்நாதன் கருத்துக்களைப் பின்பற்றியதாக அமைந்துள்ளது.


பெரியார் நூற்றாண்டின் பொழுது செய்யப்பட்ட சீர்திருத்தத்திற்குப் பின் இப்பொழுதிருக்கும் தமிழ் வரிவடிவத்திற்கு 107 குறியீடுகள் தேவைப்படுகின்றன. இவற்றுள் உயிர்மெய் இகரம், உயிர்மெய் ஈகாரம், உயிர்மெய் உகரம், உயிர்மெய் ஊகாரம் 72 ஒலியெழுத்துகளுக்கு மட்டும், 72 குறியீடுகள் தேவைப்படுகின்றன. 72 குறியீடுகளுக்குப் பதிலாக 4 குறியீடுகளால் இந்த 72 ஒலியெழுத்துக்களைக் கற்க வழி செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.


பெரியார் நூற்றாண்டின் பொழுது செய்யப்பட்ட சீர்திருத்தத்திற்குப் பின் இப்பொழுதிருக்கும் தமிழ் வரிவடிவத்திற்கு 107 குறியீடுகள் தேவைப்படுகின்றன. இவற்றுள் உயிர்மெய் இகரம், உயிர்மெய் ஈகாரம், உயிர்மெய் உகரம், உயிர்மெய் ஊகாரம் 72 ஒலியெழுத்துகளுக்கு மட்டும், 72 குறியீடுகள் தேவைப்படுகின்றன. 72 குறியீடுகளுக்குப் பதிலாக 4 குறியீடுகளால் இந்த 72 ஒலியெழுத்துக்களைக் கற்க வழி செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார். அதாவது, இகர, ஈகார உயிர்மெய் வரிசைகளுக்கு, இப்பொழுது பயன்படுத்தும் மேல் விலங்குகளை யொத்த குறியீடுகளையே வலது பக்கத்தில் பயன்படுத்தலாம். உகர, ஊகார வரிசைகட்கு கிரந்த எழுத்துகளுக்குப் பயன்படும் குறியீடுகளை உருவ அளவில் சிறுமாறுதல்கள் செய்து பயன்படுத்தலாம் என்பதாகும். இம்மாற்றமானது, தொல்காப்பிய விதிகட்கோ, நன்னூல் விதிகட்கோ புறம்பானதன்று. இவர்தம் எழுத்துச்சீர்திருத்த மாற்றத்தை ஏற்று அண்ணா பல்கலைக் கழகமும் இந்துஸ்தான் தொலையெழுதி நிறுவனமும் இணைந்து இரு மொழி தொலையெழுதியை உருவாக்கியுள்ளன.4
முனைவர் குழந்தைசாமியின் பரிந்துரைகளை ஏற்றுத் தமிழ் வரிவடிவம் சீரமைக்கப்பட்டால், தமிழ்நெடுங்கணக்கில் இப்பொழுதுள்ள 247 வரிவடிவங்கள் குறைந்து 39 வரிவடிவங்களில் (30 முதன்மை எழுத்துகளும் 9 குறியீடுகளும்) தமிழை எழுதிவிட முடியும்.


3. கிரந்த எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதும் மாற்றம்.
பலநூற்றாண்டுகளாகக் கிரந்த எழுத்துக்கள் தமிழில் பயன்படுத்தப்பட்டு வருவதை எவரும் மறுக்க முடியாது. அறிவியற் கருத்துக்களும், அறிவியற் கண்டுபிடிப்புகளின் பெயர்களும் வேதிப்பொருட்களின் பெயர்களும் இன்றைக்குக் கிரந்த எழுத்துகளை அதிகமாக பயன்படுத்தி எழுதும் வழக்கம் நிலவி வருகிறது.
கிரந்த எழுத்துக்கள், வடமொழி எழுத்துக்கள் அல்ல, வடநாட்டிலிருந்து வந்தவையுமல்ல. பல்லவர் காலத்தில் வடமொழி இலக்கியங்களை, நூல்களைக் கற்க விரும்பியபொழுது, தமிழர்கள் தேவநாகரி வரிவடிவத்தில் கற்றதாகச் சான்றுகள் இல்லை. அன்று தமிழகத்தில் வழக்கிலிருந்த வரிவடிவத்தோடு, மேலும் தேவைப்படும் ஒலிகட்கு, உருவத்தில் அதனுடன் இணைந்த சில எழுத்துக்களை உருவாக்கினார்கள். இந்த வகையில் அமைந்ததுதான் கிரந்த வரிவடிவம். ஆனால், பின்னர் தமிழ் வழக்கில் நமது முன்னோர் அந்த வரிவடிவத்தில் சில எழுத்துகளை மட்டுமே தேவை கருதி ஏற்றனர் என்ற உண்மைக்கருத்தை முனைவர் குழந்தைசாமி வைக்கிறார்.
தமிழ் எழுத்துகளிலிருந்து பிறந்தவைதான் கிரந்த எழுத்துகள் என்பது அவரது கூற்றால் உணரலாம். இருப்பினும் ஆய்த எழுத்தைப் பயன்படுத்திக் கிரந்த எழுத்துக்களின் ஒலியைப் பெற முடியும் என்றும் அவர் வழிகாட்டுகிறார். சான்றாக ஹ = ஃக, ஸ = ஃச பயன்படுத்தலாம்.
முனைவர் குழந்தைசாமியின் 'எழுத்துச் சீரமைப்பு' என்பது எழுதும் முறையை எளிமைப்படுத்துவதே அன்றி, ஒலி எழுத்து எதையும் இழப்பது அன்று. இழப்பதற்கு இடமளிப்பதுமன்று.
துணைவரிவடிவச் சிந்தனை
தமிழ் வரிவடிவத்துடன் இணையாக, சில குறிப்பிட்ட துறைகளில், குறிப்பிட்ட நோக்கங்கட்காக இன்னொரு வரிவடிவத்தையும் பயன்படுத்தலாம் என்ற சிந்தனையை முனைவர் குழந்தைசாமி கூறியுள்ளார். அதுவே அவர்தம் துணை வ‌ரிவடிவச் சிந்தனையாக விளங்குகிறது. 'துணை வரிவடிவம்' என்பது இப்பொழுது நடைமுறையில் இருக்கும் வரிவடிவத்தைக் கைவிட்டுவிட்டு, மற்றொரு வரிவடிவத்தை ஏற்பது என்பதன்று. இருக்கின்ற வரிவடிவத்தோடு தேவையைக் கருதி துணை வரிவடிவத்தையும் பயன்படுத்துவதாகும்.

இன்றைய தமிழுக்கு இலக்கணம்
தொல்காப்பியத்திற்குப் பின்னர் ஓர் இலக்கணநூல் எழுதப்படாத குறையை நன்னூல் நிவர்த்தி செய்தது. நன்னூல் கி.பி.13ஆம் நூற்றாடில் பவணந்தியாரால் எழுதப்பட்டது. கடந்த 700 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை அலசி, ஆய்ந்து முறையானவற்றை ஏற்று எழுதப்பட்ட இலக்கணம், தொல்காபியம் போல இல்லை. இருப்பினும் ஓரளவுக்காவது அறிஞர் உலகம் ஏற்றுக்கொண்டதெனப்படும் இலக்கணம் இன்றையவரை உருவாக்கப் படவில்லை. அத்தகைய இலக்கணம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவராக முனைவர் குழந்தைசாமி காணப்படுகிறார்.

“இதற்கான ஓர் அமைப்புத் தேவை. அது புலவர்கள் கூட்டமன்று. பண்டிதர், படைப்பாளர், பத்திரிக்கைத் துறையினர், அறிவியல் தொழில்நுட்பத் துறையினர் போன்ற (பயன்படுத்தும்) பெருமக்கள் கூட்டத்தினின்று, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும்.”5 அவரது இந்த வழிகாட்டுதலை தமிழக அரசு ஏற்றுள்ளது என்பதை, "1998 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 'தமிழ் இலக்கண நூலினை மீண்டும் உருவாக்க வல்லுநர்களைக் கொண்ட இலக்கணக்குழு அமைக்கப்படும்' என்ற அறிவிப்பிலிருந்து அறியலாம்.


சான்றெண் விளக்கம்
1. வா.செ. குழந்தைசாமி, அறிவியல்தமிழ், பக்.90 91
2. வா.செ. குழந்தைசாமி, அறிவியல்தமிழ், ப.92
3. வா.செ. குழந்தைசாமி, தாய்மொழி பெறாததைச் சமுதாயம் பெறாது ப.102
4. வா.செ. குழந்தைசாமி, தமிழ் எழுத்துச் சீரமைப்பு, பக் 51 525. வா.செ. குழந்தைசாமி, தாய்மொழி பெறாததைச் சமுதாயம் பெறாது ப.115