Monday, February 7, 2011

திருக்குறள் காட்டும் வாழ்வியல் நீதிகள்


திருக்குறள் காட்டும் வாழ்வியல் நீதிகள்



முனைவர் அ. பரிமளகாந்தம்
இணைப் பேராசிரியர்
அகராதியியல்
பி.எஸ். தெலுங்குப் பல்கலைக்கழகம்
ஐதராபாத் – 500 004


முன்னுரை

சமுதாயமாகச் சேர்ந்து வாழும் மனிதர்கள் நல்வழியில் நடக்க நீதிகளையும், வாழ்க்கை நெறிமுறைகளையும் ஆன்றோர்கள் நல்கியுள்ளனர். இலக்கிய வளம் நிறைந்த மொழிகளில் இலக்கியங்களும் எண்ணற்ற எண்ணிக்கையில் உள்ளன. அவ்விலக்கியங்கள் உள்ளத்தைத் திறப்பதற்கும், அதைத் திருத்திச் செம்மைப் படுத்துவதற்கும், தவறுகளைப் போக்கும் வன்மை உண்டாகுவதற்கும், நல்லனவற்றை மேற்கொள்வதற்கும், அவற்றைப் பிறர்க்கு எடுத்துக் கூறுவதற்கும், பிறரை நல்வழியில் செலுத்துவதற்கும் பயன்பட வேண்டும் என்கிறார் வைகவுண்ட் மன்லே (Selected Essays From The Writing Of Viscount Manlay P.51). அத்தகைய இலக்கியங்களை நல்கிய சான்றோர்களில் ஒருவர்தான் தெய்வப்புலவர் என்று மக்களால் கொண்டாடப்படும் திருவள்ளுவர். அன்னாரின் திருக்குறளில் சொல்லப்படாத செய்திகளே இல்லை எனலாம்.


நோக்கம்


இந்தக் கட்டுரையின் நோக்கம் வள்ளுவர் நல்கிய வாழ்வியல் நீதிகளை ஆராய்ந்து பகுத்துக் கூறுவதாகும். இக் கட்டுரையில் வள்ளுவர் கூறிய வாழ்வியல் நீதிகளாக, கல்வியால் ஏற்படும் நன்மை, நீத்தார் பெருமை, இல்வாழ்க்கை நெறி, இல்வாழ்வான், இல்லாளுக்கு இருக்கவேண்டிய பண்புகள், விருந்தோம்பலின் சிறப்பு, பொதுவாக மனிதனுக்கு இருக்க வேண்டிய இயல்புகள் எனப் பல நீதிகள் பகுத்துக் கூறப்பட்டிருக்கிறது. வள்ளுவர் கூறிய வாழ்வியல் நீதிகள் தமிழ்க் குடிமகன் ஒருவனுக்கு மட்டுமன்றி, உலகில் மனிதனாகத் தோன்றிய அனைவருக்கும் உரிய வாழ்வியல் நீதிகளாக அமைந்திருப்பதே திருக்குறளின் சிறப்பாகும்.

கல்வியின் சிறப்பு

உலகில் பிறந்த அனைவருக்கும் பொதுவாக, ஆரியம் கூறும் சாதி, இன வேறுபாடு எதுவுமின்றி அனைவரும் சமமானவர்களே என்பதைப் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையான்’ என்ற குறள் மூலம் வெளிப்படுத்துகின்றார். விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டும் உறுதிப் பொருளான கல்வியால் ஒருவன் அடையும் சிறப்புகளையும் அக் கல்வியைக் கல்லாதவன் மேல் குலத்தில் பிறந்தவனாக இருந்தாலும் கீழ் குலத்தில் பிறந்தவனாகவே கருதப்படுவான் என்றும், கீழ் குலத்தில் பிறந்தவன் கல்வி கேள்விகளில் சிறந்தவனாக இருப்பின் கல்லாத மேல்குடிப் பிறப்பானைக் காட்டிலும் உயர்ந்தவனாகவே கருதப்படுவான் என்பதைக் கீழ்கண்ட குறளில் சொல்கிறார் திருவள்ளுவர்


“மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு” (குறள் 409)


கல்வியின் பெருமையைக் கூறிய திருவள்ளுவர் வெறும் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்றுரைத்து சமூகத்தில் மேல் தளத்தில் இருப்பவனனாலும், கீழ்மட்ட நிலையில் இருப்பவனனாலும், தான் வாழும் உலகுடன் ஒத்துப் பொருந்தி வாழத் தெரியாதவன் எத்தனை உயர்ந்த கல்வியைக் கற்றவனாகவே இருந்தாலும் கல்லாதவனாக, அறிவற்றவனாகவே மதிக்கப்படுவான் என்பதை,

“உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்” (குறள் 140)

என்ற குறள் மூலம் விளக்குகிறார்.

அவ்வாறு கற்ற கல்வி பல்லோர் முன்னிலையில் மதிப்பையும், கௌரவத்தையும் உயர்த்துவதுடன், பெற்ற தாய் அத்தகு மகனைப் பெற்றதற்காகப் பெறும் மக்ழ்ச்சியைப் பின் வரும் குறள் மூலம் மிக அழகாக எடுத்துரைக்கின்றார்.
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்டதாய்” (குறள் 70)


நீத்தார் பெருமை

திருக்குறளின் அடிப்படைத் தத்துவமே அறம், பொருள், இன்பம் மூலமாக வீடு பேற்றினை அடைவதுதான். அத்தகைய வீடு பேற்றை அடைய இரு வகை அறங்கள் இருப்பதாகக் கூறுகிறார் திருவள்ளுவர். ஒன்று இல்லறம், இன்னொன்று துறவறம். இவ்விரண்டு அறங்களிலும் இல்லறமே மிகச் சிறந்தது என்றும், இல்வாழ்வை மேற்கொண்டு அறநூல் செப்பிய வழியில் வாழ்ந்து சிறந்த மனைவியுடன் நன்மக்களைப் பெற்று தருமவழியில் நடந்து, வீடுபேற்றினை அடைவதற்காக துறவறம் மேற்கொள்வதையே சிறந்த அறமாக வள்ளுவர் கருதுகிறார் என்பதைக் கீழ் கண்ட குறள் உணர்த்துகிறது.

“இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு” (குறள் 23)


மேலும் வயதால் ஒருவரைப் பெரியவர் என்று கருத முடியாது என்றும், அரிய செயல்களைச் செய்பவர் வயதில் சிறியவராக இருந்தாலும், பெரியவராக மதிக்கப் பெறுவர் என்றும் அவ்வாறு செயற்கரிய செயலை செய்ய இயலாதவர் வயதில் பெரியவராக இருந்தாலும் சிறியவராகவே கருதப் படுவர் என்றும் குறள் 26 மூலம் உணர்த்துகிறார் திருவள்ளுவர்.

“செயற்கரிய செய்வர் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலாக தவர்” (குறள் 26)

இல்வாழ்க்கை

வீடு பேற்றை அடைய துறவறத்தை விட மிகச் சிறந்தாகக் கருதப்படும் இல்வாழ்க்கை, தற்காத்துக் கொண்டு தற்கொண்டானையும் பேணிப் பாதுகாக்கும் இல்லாளையும், இவன் தந்தை என்னோற்றான் கொல் என்று சொல்லுமளவுக்கு கல்விக் கேள்விகளில் சிறந்த மகனையும் பெற்று பிறன் பழிப்பு இல்லாத வாழ்க்கையே பண்பும் பயனும் நிறைந்தகாக இருக்கும் என்கிறார் திருவள்ளுவர். இதையே,

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” (குறள் 45)

“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று” (குறள் 49)

என்ற குறள்கள் மூலம் விளக்குகிறார்.

இல்வாழ்வான் இல்லாளிடம் இருக்க வேண்டிய பண்புகள்

இல்வாழ்வான் கடமையைக் கூறப்போந்த திருவள்ளுவர் அறநெறியில் அதாவது பழி பாவத்திற்கு அஞ்சி சம்பாரித்த செல்வத்தைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டு வந்தால் அவன் சந்நிதி என்றும் நிலைத்து நிற்பது மட்டுமின்றி அழிந்து போகாமலும் இருக்கும் என்பதை,

“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள் 44)

இல்வாழ்க்கையை மேற்கொண்ட ஆண்மகன் தான் நல்வழியில் ஈட்டிய பொருளை எவ்வாறு பயன்படுத்தினால் சந்ததி நிலைக்கும் என்று 44 வது குறளில் சொல்லிய வள்ளுவர் அத்தகைய ஆண்மகனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், அவனுக்கு அமையும் மனைவி எத்தகையவளாக இருந்தால் தன்னையொத்த மனிதர்களின் முன் தலைநிமிர்ந்து நடக்க முடியும் என்பதையும் கீழ்கண்ட குறளின் மூலம் விளக்குகிறார் திருவள்ளுவர்

“அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று” (குறள் 150)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறள் மூலம் இன்ன அறவழியில் நடக்கவேண்டும், இன்னின்ன நற்காரியங்கள் செய்யவேண்டும், என்று வரையறுத்துக் கொள்ளாவிட்டாலும் மனைவியிருக்கப் பிறருக்குச் சொந்தமான பெண்ணை நினையாமலாவது இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்.

அவ்விதம் அறநெறியில் பிறன் மனை விழையாது இல்வாழ்வு மேற்கொண்ட ஆண் மகனுக்கு அவனைப் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தும் நற்பண்புகளுக்கு உறைவிடமான கற்பு எனச் சிறப்பித்துக் கூறப்படும் நிலைகுலையா மனஉறுதி கொண்ட பெண் மனைவியாக வாய்க்கப் பெறாவிட்டால் ஏறுபோல் பீடு நடை போடமுடியாது என்பதைப்.

“புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை” (குறள் 59)

விருந்தோம்பல்

தமிழர்களின் இன்னும் சொல்லப் போனால் இந்திய மண்ணின் தலையாய மிகச் சிறந்த குணம் வீட்டிற்கு வந்த விருந்தினை மனம் கோணாமல் உபசரித்து வழியனுப்புவது.

“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு” (குறள் 86)

வந்த விருந்தினரை உபசரித்து அனுப்பிவிட்டு வரும் விருந்தினரையும் எதிர்பார்த்திருந்து அழைத்துப் போற்றுவான். வானத்தவர்க்கு நல்ல விருந்தினராகச் சென்று சேருவான் வீட்டிற்கு வந்த விருந்தினரை நன்முறையில் உபசரிக்காவிட்டால் அந்த விருந்தினரின் நிலை குறித்து

“மோப்பக் குழையும் அனிச்சம் முகத்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (குறள் 90)

எல்லா மலரினும் மென்மையானது அனிச்சம்பூ. அப்பூவை முகர்ந்து பார்த்தால் வாடி விடும். ஆனால் வரும் விருந்தினர் அப்பூவினும் மென்மையானவர் என்றும், அவ்விருந்தினரை விருந்தோம்பல் செய்வான் முகம் மாறி நோக்கினாலும் அவ்விருந்தினர் வாடி விடுவார்கள் என்று விருந்தோம்பல் என்ற வாழ்வியல் கூற்றின் மென்மையை அனிச்ச மலருக்கு ஒப்பிடுகிறார் வள்ளுவர்.

இவ்வாறாக இல்வாழ்க்கையில் வாழ்வியல் கோட்ப்பாட்டைக் கூறும் வள்ளுவர் தனிமனிதனுக்கென்று சில வாழ்வியல் நெறிகளையும் கீழ்கண்ட விதமாகக் கூறுகிறார்.

இன்னா செய்யாமை

ஒருவன் தான் செய்த பாவ புண்ணியங்களின் பலன்களை அனுபவிக்கவேண்டும் என்றும் ஒருவருக்குத் முற்பகலில் தீங்கு செய்தால் பிற்பகலிலேயே அத் தீங்கை அனுபவிக்க நேரும் என்ற நீதியையும் வலியுறுத்துகிறார் திருவள்ளுவர்

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்” (குறள் 319)

ஒருவன் தனக்கு இன்னா செய்யும் போது திரும்பி ‘did for tat’ என்று பழிக்கு பழி வாங்காமல் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்ற பைபிளின் பண்பைப் போல தீமை செய்தவன் நாணும் விதமாக நன்மை செய்து விடவேண்டும் என்று

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்” (குறள் 314)

கூறுகிறார்.

நன்றி மறவாமை.

உலகமயமாதலால் உலகம் சுருங்கியதென்னவோ உண்மை. உலகம் சுருங்கியது போல மனிதனின் மனமும் இன்றைய சூழலில் சுருங்கிவிட்டது. . அண்டைஅயலாருடன் எவ் வகையான உறவும் இன்றி மாடமாளிகைகளாகக் கட்டப்பட்ட ப்ளாட்டுகளில் மனிதன் தனித்து விடப்பட்டான் என்பதும் உண்மைதான். தனியான மனிதனிடம், இயல்பாக இருக்கவேண்டிய மனிதநேயமே இல்லாமல் போன பிறகு செய்நன்றி போன்றறவற்றைப் பற்றி யோசிக்க மனிதனுக்கு நேரம் எங்கே இருக்கிறது? ஆனாலும் உரிய காலத்தில் செய்யப்பட்ட உதவி கடுகளவே யானாலும் மறந்து விடாமல் நன்றியுடன் இருக்கவேண்டும் என்ற வாழ்வியல் கோட்பாட்டைக் கீழ்கண்ட குறள் மூலம் விளக்குகிறார்

“தினைத்துணை நன்றிசெயினும் பனைத் துணையாகக்
கொள்வர் பயன் தெரிவர்” (குறள் 104).


புறங்கூறாமை

மனிதனுக்கு மனிதன் தீங்கு செய்யாதது மட்டுமல்ல; செய்த தீமையை மன்னித்து விடவேண்டும் என்று கூறும் வள்ளுவர் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது புறம் கூறக் கூடாது என்றும் கூறுகிறார். அறம் என்ற சொல்லை வாயினால் கூட சொல்லாதவனாக இருந்தாலும் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத போது பேசாமல் இருந்தால் அதுவே சாலச் சிறந்தது என்பதை கீழ்கண்ட குறள் மூலம் விளக்குகிறார்.

“அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது” (குறள் 181)

புறங்கூறக்கூடாது என்று போதித்த வள்ளுவர் பேசும் மொழிகளும் பயனுடையதாக இருக்கவேண்டும் என்றும் காமசோமா என்று பயனற்ற சொற்களைச் சொல்லக்கூடாது என்று.

“சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்” (குறள் 200)

என்று அறிவுரை கூறுகிறார்.

இனியவை கூறல்

மனிதனின் வாழ்நாள் சிறிது. அதில் சாதிக்கவேண்டியவை எண்ணற்றவை.. கூடி வாழும் மனிதர்களுடன் நல்லுறவு இருந்தால் தான் வாழ்க்கையில் சில நல்ல காரியங்களைச் சாதிக்கமுடியும். நல்லுறவு கொள்ள நன்மொழி பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்றும் புறங்கூறக் கூடாது; பயனற்ற சொற்களைப் பேசக் கூடாது என்று திருவள்ளுவர் இனிய மொழிகளையே பேசவேண்டும் என்றும், நல்ல கனிந்த கனி கையிலிருக்கும்போது வெக்காய் போன்ற கொடூரமான வார்த்தைகளை ஏன் பேசவேண்டும் என்று கேட்கிறார்,

“இனிய உளவாக இன்னாதல் கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று” (குறள் 100)
என்கிறார்.

மனத்தூய்மை

பிறருக்குத் தீங்கு செய்யாமை மட்டுமல்ல; இன்சொல்லையே பேச வேண்டும் என்று கூறும் வள்ளுவர் மனமும் எவ்வித களங்கமும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும். அவ்விதம் இருந்தலே அறம் என்றும் மனத்தூய்மையற்ற செயல்கள் யாவும் ஆரவாரச் செயல்கள் என்றும் கீழ்கண்ட குறளின் மூலம் விளக்குகிறார். .

“மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற” (குறள் 34)

ஒருவன் தன் மனத்தின் கண் குற்றம் இல்லாதவனாக இருத்தல் வேண்டும். அதவே அறன் எனப்படுவதாகும். மனத்தூய்மையின்றிச் செய்யப்படும் பிற அனைத்துமே ஆரவாரத்துடன் செய்யப்படுபவனவேயாகும்.

முடிவுரை

பிறப்பால் அனைவரும் சமம் என்று கூறி நீத்தார் பெருமை இல்வாழ்க்கை, இல்வாழ்வான், இல்லாள் இவர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களையும், ஒவ்வொரு மனிதனிடம் இருக்கவேண்டிய குணங்களாக இனியவை கூறல் இன்னா செய்யாமை, நன்றி மறவாமை, புறங்கூறாமை, விருந்தோம்பல், மனத்தூய்மை போன்றவற்றை வாழ்வியல் நீதிகளாக விளக்கியுள்ளமை இக் கட்டுரையின் மூலம் விளங்குகிறது.

துணை நூல்கள்
1. பாரதியார், பாரதியார் கவிதைகள், வானதி பதிப்பகம், சென்னை, ஐந்தாம் பதிப்பு, 1883, ப. 39.
2. மதுரைத் தமிழ் நாகனார், திருவள்ளுவ மாலை, திருக்குறள் - பரிமேலழகர் உரை, கழக வெளியீடு, சென்னை, 1964, ப. 408.
3. ந. முருகேச பாண்டியன், "திருவள்ளுவர் என்ற மனிதர்", வள்ளுவம் இதழ் (வைகாசி - ஆனி) திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மே - 2000.
4. மு. கருணாநிதி, "திருக்குறள் என் சிந்தனையை நெய்திருக்கும் செந்நூல்", கோட்டம் முதல் குமரி வரை, குமரி முனை திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மலர், ப. 8.
5. மாங்குடி மருதனார், மதுரைக் காஞ்சி, கழக வெளியீடு, சென்னை, பாடல் வரிகள், 778-782.
6. புறநானூறு, கழக வெளியீடு, சென்னை, பாடல் எண். 235.
7. சீத்தலைச் சாத்தனார், மணிமேகலை, பாரி நிலையம், சென்னை, எட்டாம் பதிப்பு, 1987, ப. 306.
8. குன்றக்குடி அடிகளார், வள்ளுவத்தின் சமயவியல், வள்ளுவம் இதழ் (பங்குனி - சித்திரை), திருக்குறள் பண்பாட்டு ஆய்வு மையம், விருத்தாசலம், மார்ச் 1999, ப. 11

Tuesday, February 1, 2011

முனைவர் வா.செ. குழந்தைசாமியின் அறிவியல் தமிழ்ப்பணி


முனைவர் வா.செ. குழந்தைசாமியின் அறிவியல் தமிழ்ப்பணி



முனைவர் ஆ. அஜ்முதீன், எம்.ஏ., பி.எட்., எஸ்.எல்.இ.டி., பிஎச்.டி.,
முதுகலை தமிழாசிரியர்,



மனித இனத்தின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் உந்துச​க்தியாக விளங்குவது தாய் மொழியாகும். தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குவது தமிழ்மொழியாகும். தமிழரின் நிலை உயர வேண்டுமானால் புத்தம் புதிய கலைகள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழும் இந்நூற்றாண்டின் செயற்பாடுகளைத் தமிழ்மொழி தன் வாயிலாக விளக்க வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்பக் கருத்துகளைத் தமிழ்மொழி ஏற்றாக வேண்டும் என்ற புதிய சிந்தனை முகிழ்த்துள்ளது. அதன் அடிப்படையில்தான் அறிவியல்தமிழ் என்ற புதிய நோக்கு பிறந்துள்ளது. இவ்வறிவியல்தமிழ் வளர்ச்சிக்கு முனைவர் வா.செ. குழந்தைசாமி ஆற்றியுள்ள பணிகள் குறித்து இவ்வாய்வுக் கட்டுரையில் காணலாம்.
கலைச்சொல்லாக்கம்
வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தமிழ் ஏற்க வேண்டும். தமிழில் அறிவியல் நூல்கள் எழுதப்பட வேண்டும். தமிழ் வழி அறிவியல் கற்பிக்கப்பட வேண்டும் என்பன போன்ற செயல்பாடுகள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.
இது அறிவியல் யுகம். அறிவியலின் பாதிப்பு, இந்த யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களிடையேயும் காணப்படுகிறது. அவர்தம் வாழ்க்கையிலும், கல்வி முறைகளிலும் அறிவியல் கருத்துகளும் கண்டுபிடிப்புகளும் மிக இன்றியமையாத இடத்தைப் பெற்றுவிட்டன எனலாம். நாள்தோறும் அறிவியல் சொற்களும் கருத்துகளும் பல்கிப்பெருகி வருகின்றன. அவற்றை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்மொழிக்கு ஒலி, சொல், சொற்றொடர் ஆகிய பல நிலைகளிலும் ஒரு தனி அமைப்பு தேவை எனலாம். ஏற்கனவே உள்ள முத்தமிழோடு இத்தமிழையும் சேர்த்து இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல்தமிழ் என நான்கு தமிழாகக் கொள்ளலாம். முனைவர் குழந்தைசாமி அறிவியல் தமிழையும் கல்வித் தமிழையும் ஒன்றாகவே கருதுகிறார்.
கலைச்சொல்லாக்க முயற்சி தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உருவாக்கப்பட்ட கலைச்சொல் தொகுப்புகளின் பட்டியலும், அவற்றில் இடம் பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையும் கொண்ட கட்டுரை ஒன்றை 'கலைச்சொல்லாக்க முயற்சி இதுவரை' என்ற தலைப்பில் முனைவர் இராதா செல்லப்பன் எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் மறித்துவரும் சொற்களை நீக்கி இரண்டு இலட்ச​த்திற்கும் அதிகமான சொற்கள் உருவாக்கப் பட்டிருப்பதாக அவரது பட்டியலிருந்து தெரிய வருகிறது. இக்கட்டுரையின் முடிவாக கலைச்சொற்களை உருவாக்கும் முறைமையில் பொதுவான கொள்கைகள் வகுக்கப்படவில்லை என்பதை அறிய முடிகிறது.
அறிவியல்தமிழ் கலைச்சொல்லாக்கம் 1830‍இல் தொடங்கிப் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வந்தாலும், அண்மைக்காலத்தில் தான் புது விழிப்புத்தோன்றி இப்பணி செவ்வனே நடைபெறத் தொடங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள அறிவியல் தமிழாக்க முயற்சிகளை முனைவர் குழந்தைசாமி சிறந்தன என்று கருதுகிறார். இருப்பினும் கலைச்சொற்களை உருவாக்குவதற்கென்று சில நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டுமென்ற சிந்தனையுடைய வராகவும் அவர் விளங்குகிறார். இதனை,
"செய்த அளவிற்கு இப்பணிகள் சிறந்தன. இந்நூல்கள் படிப்போர்க்குப் பயன் தருவன. இந்தப் பின்னணியில் நாம் கருத வேண்டியன‌ பின்வருமாறு :
*துறைச் சொற்களை உருவாகுவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளனவா?
*இவ்வெளியீகளில் பயன்படுத்தப்பட்டுள்ள துறைச்சொற்கள் முன் கூட்டியே வகுக்கப் பட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் அமைந்தவையா?
*இதுவரை, பொதுவான, வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் எவையும் இல்லையெனில் கடந்தகால வெளீயீடுகளின் ஆசிரியர்கள் துறைச்சொற்களைப் படைத்த முறைகளிலிருந்து அவர்கள் அனுபவத்தில் இருந்து, நாம் சில நெறிமுறைகளை வகுப்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றனவா?
*துறைச்சொற்களை உருவாக்குவதற்கான அப்படிப்பட்ட நெறிமுறைகள் தேவையா?
என்று அவர் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது.

அவரவர் விருப்பிற்கும் புலமைக்கும் ஏற்ற வகையில் கலைச்சொற்கள் அமைக்கப்படுவதால் அவை வரைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக கலைச்சொல் என்பது, "சாஸ்திரம், விஞ்ஞான‌ம் என‌ வ‌ழ‌ங்க‌ப்பட்ட‌ Science இன்று அறிவிய‌ல் என‌த் தரப்படுத்த‌ப்ப‌ட்டு வ‌ழ‌ங்க‌ப் ப‌டுவ‌தைப் போல‌வே க‌லைச் சொற்க‌ள் உருவாக்க‌ம் குறித்த‌ வழிகாட்டல் ப‌ணியினை முனைவ‌ர் குழந்தைசாமி மேற்கொண்டுள்ளார். இன்றுவரை துறைச்சொற்களை உருவாக்குவதற்கு அவற்றை ஒலிப்பெயர்ப்பதா, மொழிபெயர்ப்பதா, புதிய‌சொற்களைப் படைப்பதா என்பதில் நமக்குள் ஒரு தெளிவில்லை. ஒலிப்பெயர்ப்புக்களில், 12 உயிர், 18 மெய், 1 ஆய்தம் இவற்றின் அடிப்படையில் அமைந்த ஒலிகள் நமக்குப் போதுமா, போதாவா என்பதில் இன்று நம்முள் ஒத்த கருத்தில்லை. எல்லோருடைய ஒருங்கிணைந்த பணியால் உருவாக்கப்பட வேண்டியது கலைச்சொல்லாக்கம் என்ற தெளிவானக் கொள்கையுடையவர் என்பது தெளிகிறது. அவ‌ர் 1. கலைசொற்க‌ள் உருவா‌க்கும் வ‌ழிக‌ள், 2. க‌லைச்சொல் அக‌ராதிக‌ள் வெளியிடும் முறைக‌ள், 3. க‌லைச்சொல் வ‌ங்கி அமைக்கும் வழிமுறைக‌ள் ஆகிய‌ மூன்று செய‌ல்பாடுக‌ள் வ‌ழி இப்ப‌ணிக்கான‌ க‌ருத்துக‌ளை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு :
கலைசொற்க‌ள் உருவ‌க்கும் வ‌ழிக‌ள்
"1. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் சொற்களை இன்றைய தேவைக்கேற்பப் பொருள் கொண்டு பயன்படுத்துதல்.
2. தற்கால இலக்கியங்களிலிருந்து சொற்களைப் பயன்படுத்துதல்.
3. பேச்சுமொழியிலிருந்து தகுந்த சொற்களை எடுத்தாளல்.
4. தொடர்புள்ள பிறமொழிச் சொற்களைக் கடன் பெறல்.
5. பிறமொழித் துறைச்சொற்களை மொழிபெயர்த்தல்.
6. புதுச்சொற்களைப் படைத்தல்.
7. உலக வழக்கை அப்படியே ஏற்றுக்கொள்ளல்"1
இவையே கலைச்சொற்களை உருவாக்க‌ அவர் கூறும் வழிமுறைகளாவன. மேலும், அறிவியல்தமிழாக்கத்தில் நாம் உருவாக்க வேண்டிய துறைச்சொற்கள், குறியீடுகள், சூத்திரங்கள் ஆகியவற்றை நான்கு வகையினவாகப் பாகுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்துகிறார். அவை,
1. மாற்றம் எதுமில்லாது உலக அளவில் பொதுமையானவையாகப் பயன்படுத்த வேண்டிய குறியீடுகள், சூத்திரங்கள்.
2. மாற்றமில்லாது அப்படியே ஒலிபெயர்த்துப் பயன்படுத்தப்பட‌ வேண்டிய சொற்கள்.
3. மாற்றமில்லாது ஒலிபெயர்ப்பதா, அல்லது புதிய சொல்லை உருவாக்குவதா என்ற கருத்து வேறுபாடுகட்கு இடந்தரும் சொற்கள்.
4. புதிய சொற்கள் உருவாக்கப்பட்டேயாக வேண்டிய சொற்கள்2
என்பனவகும். இவ்வழிகாட்டல்களின் படி கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டால் அறிவியல் தமிழ் வளர்ச்சி செம்மையடையும்.
2. க‌லைச் சொல் அக‌ராதிக‌ள் வெளியிடும் முறைக‌ள்
கலைச்சொல் அகராதித் தொகுப்புகள் வெளியிடும் முறையை இரு அடிப்படைப் பிரிவுகளாகக் முனைவர் குழந்தைசாமி நெறிபடுத்தியுள்ளார். அவை,
"பகுதி (1):அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவம், வேளாண்மை, சமுதாய இயல்கள், கலை, மொழி, இலக்கியம், சட்டம், ஆட்சி போன்ற பெரும் பிரிவுகளை எடுத்து, இந்த ஒவ்வொன்றுக்கும் பொதுவான சொற்களைத் தனித்தனித் தொகுதிகளாகத் தயார் செய்யலாம்.3

பகுதி (2): பகுதி (1)இல் உள்ள பெரும் பிரிவுகள் ஒவ்வொன்றின் கீழ்வரும் கிளைப் பிரிவுகளுக்கான கலைச்சொற்கள் இப்பிரிவில் இடம்பெறும். சான்றாக, பொறியியல் தொழில்நுட்பத்தை எடுத்துக்கொண்டால், அனைத்துப் பொறியியல் தொழில் நுட்பங்களுக்கும் பொதுவான சொற்கள் பகுதி (1)‍-லும், குடிமைப்பொறியியல், மின்சக்திப் பொறியியல், எந்திரப்பொறியியல் போன்ற தனித்தனிப் பிரிவுகட்கான கலைச்சொற்கள் அந்தந்த தலைப்புகளில் பகுதி (2)‍-லும் இடம் பெறலாம்." என்பனவாகும். இந்த வழிகாட்டலின் அடிப்படையில் கலைச்சொல்லாக்கப்பணி நடைபெற்றால் பொருட்செலவும் கால விரையமும் குறையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
3. க‌லைச்சொல் வ‌ங்கி அமைக்கும் வழிமுறைக‌ள்
இந்தியத் துணைக் கண்டத்திலேயும் வெளியிலேயும் நிறுவனங்கள், குழுக்கள் மற்றும் தனி அலுவலர்கள் தொகுத்துள்ள எல்லா கலைச்சொற்களையும் திரட்ட வேண்டும். இதற்கெனத் தனித் தலைமையகம் அமைக்கப்பட வேண்டும் என்று முனைவர் குழந்தைசாமி கருதுகிறார். அதற்கு 'கலைச்சொல் வங்கி' என்று பெயரிட வேண்டுமென்றும் குறிப்பிடுகிறார். அத்தலைமையகத்தில் சேர்ந்த கலைச்சொற்கள் அனைத்தையும் கணிப்பொறியில் தேக்க வேண்டும். அக்கலைச்சொற்கள், தரப்படுத்தப்பட்டவை, தரப்படுத்தப்படாதவை என்ற இரு பிரிவுகளாக வகைபடுத்தப்பட வேண்டும். அக்கலைச்சொல் வங்கி அனைவருக்கும் இணையம் போன்ற இணைப்புச் சாதனம் வழி பரவலாக்கப்பட வேண்டும்.
முனைவர் குழந்தைசாமி கூறுவதன் அடிப்படையில் கலைச்சொல் வங்கி அமைக்கப்படுமானால் கலைச்சொல்லாக்கப் பணியின் முழுமையான பயனை எல்லோரும் பெறலாம். இதனால் எவர் வேண்டுமானாலும் தேவையான துறைச்சொற்களைப் பெறமுடியும். மேலும், அறிவியல் தமிழாக்க நூல்கள் செம்மையடைய வாய்ப்புக்களும் உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் இதுவரை உருவாகியுள்ள கலைச்சொற்களை அறிந்துகொள்ள வழியும் உள்ளன.
எழுத்துச் சீர‌மைப்பு
வ‌ள‌ர்ந்து வ‌ரும் அறிவிய‌ல் தொழில்நுட்ப‌ வ‌ள‌ர்ச்சிக்கேற்ப‌ மொழி எல்ல‌ நிலைக‌ளிலும் வளைந்து கொடுத்து வ‌ள‌ர‌ வேண்டிய‌ கால‌ச்சூழ‌ல் ஏற்ப‌ட்டுள்ள‌து. அறிவியல்தமிழின் வளச்சிக்குத் தமிழ்மொழியின் வரிவடிவ மாற்றம் அவசியமான தேவையாக அறிஞர்கள் பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. அவ்வறிஞர்கள் வரிசையில் அறிவியல் அறிஞரான முனைவர் குழந்தைசாமியும் எழுத்து சீரமைப்பு குறித்து சிந்தித்திருப்பது நோக்கத்தக்கது.
தமிழ் வரிவடிவத்தில் மாற்றமும், திருத்தமும் பண்டைக்காலம் முதல் இடம் பெற்று வந்திருக்கின்றன. முனைவர் குழந்தைசாமியின் எழுத்துச்சீரமைப்பு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் வளர்ந்து வந்துள்ள எழுத்துச்சீரமைப்புச் சிந்தனைகளைத் தொகுத்துக்கூறி அவற்றின் அவசியத்தையும் விளக்குவதாகும். மேலும், அவரது பரிந்துரைகள் சிலவும் அமைந்துள்ளன. இதில் அவருக்கே உரிய சீரிய சிந்தனைகளும், அணுகுமுறைகளும் காணப்படுகிறது. அவரின் எழுத்துச் சீரமைப்பு, “1. மெய்யெழுத்துக்களின் வடிவ மாற்றம், 2. உயிர்மெய் எழுத்துக்களின் வடிவ மாற்றம், 3. கிரந்த எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதும் மாற்றம்” என்ற முறைகளில் அமைந்துள்ளது.
1. மெய்யெழுத்துக்களின் வடிவ மாற்றம்.


மெய்யெழுத்துக்கள் உயிர்மெய் அகர வரிசை பதினெட்டிற்கும் உள்ள வேறுபாடு மெய்யெழுத்துக்களின் மேல் இடப்படும் புள்ளி மட்டுமே ஆகும். அப்புள்ளியை க,ங,ச,.....ற,ன முதலியவற்றின் வலது புறத்தில் இட்டால் மற்ற உயிர்மெய் வரிசைகளைப் போல ஒரே சீர்மை ஏற்படும். இதனால் க,ங,ச,.....ற,ன என்ற பதினெட்டு வடிவங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும். தனியே க்,ங்,ச்,....ற்,ன். என்ற பதினெட்டு வடிவங்கள் தேவையில்லை.
2 உயிர்மெய் எழுத்துக்களின் வடிவ மாற்றம்.
உயிர்மெய் எழுத்துக்கள் உயிரும் மெய்யும் இணைந்த கூட்டொலிகளால் ஆனவை. இக்கூட்டொலிகளின் வடிவங்களில் சிலவரிசைகளில் ஒரு சீர்மையும் சிலவரிசைகளில் சீர்மைக்குறைவும் காணப்படுகின்றன. அதாவது உயிர்மெய்யில் அகர வரிசைத் தொடங்கி ஒளகார வரிசை வரையிலுள்ள 12 வரிசைகளில், இகர, ஈகர, உகர, ஊகாரம் ஆகிய நான்கு வரிசைகளில் சீர்மைக்குறைவு காணப்படுகிறது. எவ்வாறெனில், உயிர்மெய் எழுத்துக்களில் கா, கெ, கே, கை, கொ, கோ, கெள இவற்றில் குறியீடுகள் வலதுபுறம். இடதுபுறம் ஆகிய இருபுறங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. அஃதவது மெய்யோடு பிணையாமல் தனியகவே இருக்கின்றன. அதுவே கி, கீ, கு, கூ இவற்றில் குறியீடுகள் பிணைந்து காணப்படுகின்றன. மற்ற வரிசைகளில் பயன்படுத்தப்படும் (துணைக்கால்,கொம்பு...) நான்கு குறியீடுகள் போலவே இவற்றிற்கும் தனியான குறியீடுகள் பயன்படுத்தாமல் இந்நான்கு வரிசைக்கும் 72 குறியீடுகள் பயன்படுத்தப் படுகின்றன. நான்கு குறியீடுகளால் அறிய வேண்டிய எழுத்துக்களை 72 குறியீடுகளால் அறிய வேண்டிய சிரமம் உள்ளதை எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே, இங்கு சீர்திருத்தம் தேவை என்பதை உணர முடிகிறது. இச்சீர்திருத்தத்திற்கு முனவர் குழந்தைசாமி அவர்கள் செயல்பாடுகள் தெ.பொ.மீ., மு.வ., கி.வா.ஜகன்நாதன் கருத்துக்களைப் பின்பற்றியதாக அமைந்துள்ளது.


பெரியார் நூற்றாண்டின் பொழுது செய்யப்பட்ட சீர்திருத்தத்திற்குப் பின் இப்பொழுதிருக்கும் தமிழ் வரிவடிவத்திற்கு 107 குறியீடுகள் தேவைப்படுகின்றன. இவற்றுள் உயிர்மெய் இகரம், உயிர்மெய் ஈகாரம், உயிர்மெய் உகரம், உயிர்மெய் ஊகாரம் 72 ஒலியெழுத்துகளுக்கு மட்டும், 72 குறியீடுகள் தேவைப்படுகின்றன. 72 குறியீடுகளுக்குப் பதிலாக 4 குறியீடுகளால் இந்த 72 ஒலியெழுத்துக்களைக் கற்க வழி செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.


பெரியார் நூற்றாண்டின் பொழுது செய்யப்பட்ட சீர்திருத்தத்திற்குப் பின் இப்பொழுதிருக்கும் தமிழ் வரிவடிவத்திற்கு 107 குறியீடுகள் தேவைப்படுகின்றன. இவற்றுள் உயிர்மெய் இகரம், உயிர்மெய் ஈகாரம், உயிர்மெய் உகரம், உயிர்மெய் ஊகாரம் 72 ஒலியெழுத்துகளுக்கு மட்டும், 72 குறியீடுகள் தேவைப்படுகின்றன. 72 குறியீடுகளுக்குப் பதிலாக 4 குறியீடுகளால் இந்த 72 ஒலியெழுத்துக்களைக் கற்க வழி செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார். அதாவது, இகர, ஈகார உயிர்மெய் வரிசைகளுக்கு, இப்பொழுது பயன்படுத்தும் மேல் விலங்குகளை யொத்த குறியீடுகளையே வலது பக்கத்தில் பயன்படுத்தலாம். உகர, ஊகார வரிசைகட்கு கிரந்த எழுத்துகளுக்குப் பயன்படும் குறியீடுகளை உருவ அளவில் சிறுமாறுதல்கள் செய்து பயன்படுத்தலாம் என்பதாகும். இம்மாற்றமானது, தொல்காப்பிய விதிகட்கோ, நன்னூல் விதிகட்கோ புறம்பானதன்று. இவர்தம் எழுத்துச்சீர்திருத்த மாற்றத்தை ஏற்று அண்ணா பல்கலைக் கழகமும் இந்துஸ்தான் தொலையெழுதி நிறுவனமும் இணைந்து இரு மொழி தொலையெழுதியை உருவாக்கியுள்ளன.4
முனைவர் குழந்தைசாமியின் பரிந்துரைகளை ஏற்றுத் தமிழ் வரிவடிவம் சீரமைக்கப்பட்டால், தமிழ்நெடுங்கணக்கில் இப்பொழுதுள்ள 247 வரிவடிவங்கள் குறைந்து 39 வரிவடிவங்களில் (30 முதன்மை எழுத்துகளும் 9 குறியீடுகளும்) தமிழை எழுதிவிட முடியும்.


3. கிரந்த எழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதும் மாற்றம்.
பலநூற்றாண்டுகளாகக் கிரந்த எழுத்துக்கள் தமிழில் பயன்படுத்தப்பட்டு வருவதை எவரும் மறுக்க முடியாது. அறிவியற் கருத்துக்களும், அறிவியற் கண்டுபிடிப்புகளின் பெயர்களும் வேதிப்பொருட்களின் பெயர்களும் இன்றைக்குக் கிரந்த எழுத்துகளை அதிகமாக பயன்படுத்தி எழுதும் வழக்கம் நிலவி வருகிறது.
கிரந்த எழுத்துக்கள், வடமொழி எழுத்துக்கள் அல்ல, வடநாட்டிலிருந்து வந்தவையுமல்ல. பல்லவர் காலத்தில் வடமொழி இலக்கியங்களை, நூல்களைக் கற்க விரும்பியபொழுது, தமிழர்கள் தேவநாகரி வரிவடிவத்தில் கற்றதாகச் சான்றுகள் இல்லை. அன்று தமிழகத்தில் வழக்கிலிருந்த வரிவடிவத்தோடு, மேலும் தேவைப்படும் ஒலிகட்கு, உருவத்தில் அதனுடன் இணைந்த சில எழுத்துக்களை உருவாக்கினார்கள். இந்த வகையில் அமைந்ததுதான் கிரந்த வரிவடிவம். ஆனால், பின்னர் தமிழ் வழக்கில் நமது முன்னோர் அந்த வரிவடிவத்தில் சில எழுத்துகளை மட்டுமே தேவை கருதி ஏற்றனர் என்ற உண்மைக்கருத்தை முனைவர் குழந்தைசாமி வைக்கிறார்.
தமிழ் எழுத்துகளிலிருந்து பிறந்தவைதான் கிரந்த எழுத்துகள் என்பது அவரது கூற்றால் உணரலாம். இருப்பினும் ஆய்த எழுத்தைப் பயன்படுத்திக் கிரந்த எழுத்துக்களின் ஒலியைப் பெற முடியும் என்றும் அவர் வழிகாட்டுகிறார். சான்றாக ஹ = ஃக, ஸ = ஃச பயன்படுத்தலாம்.
முனைவர் குழந்தைசாமியின் 'எழுத்துச் சீரமைப்பு' என்பது எழுதும் முறையை எளிமைப்படுத்துவதே அன்றி, ஒலி எழுத்து எதையும் இழப்பது அன்று. இழப்பதற்கு இடமளிப்பதுமன்று.
துணைவரிவடிவச் சிந்தனை
தமிழ் வரிவடிவத்துடன் இணையாக, சில குறிப்பிட்ட துறைகளில், குறிப்பிட்ட நோக்கங்கட்காக இன்னொரு வரிவடிவத்தையும் பயன்படுத்தலாம் என்ற சிந்தனையை முனைவர் குழந்தைசாமி கூறியுள்ளார். அதுவே அவர்தம் துணை வ‌ரிவடிவச் சிந்தனையாக விளங்குகிறது. 'துணை வரிவடிவம்' என்பது இப்பொழுது நடைமுறையில் இருக்கும் வரிவடிவத்தைக் கைவிட்டுவிட்டு, மற்றொரு வரிவடிவத்தை ஏற்பது என்பதன்று. இருக்கின்ற வரிவடிவத்தோடு தேவையைக் கருதி துணை வரிவடிவத்தையும் பயன்படுத்துவதாகும்.

இன்றைய தமிழுக்கு இலக்கணம்
தொல்காப்பியத்திற்குப் பின்னர் ஓர் இலக்கணநூல் எழுதப்படாத குறையை நன்னூல் நிவர்த்தி செய்தது. நன்னூல் கி.பி.13ஆம் நூற்றாடில் பவணந்தியாரால் எழுதப்பட்டது. கடந்த 700 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியை அலசி, ஆய்ந்து முறையானவற்றை ஏற்று எழுதப்பட்ட இலக்கணம், தொல்காபியம் போல இல்லை. இருப்பினும் ஓரளவுக்காவது அறிஞர் உலகம் ஏற்றுக்கொண்டதெனப்படும் இலக்கணம் இன்றையவரை உருவாக்கப் படவில்லை. அத்தகைய இலக்கணம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவராக முனைவர் குழந்தைசாமி காணப்படுகிறார்.

“இதற்கான ஓர் அமைப்புத் தேவை. அது புலவர்கள் கூட்டமன்று. பண்டிதர், படைப்பாளர், பத்திரிக்கைத் துறையினர், அறிவியல் தொழில்நுட்பத் துறையினர் போன்ற (பயன்படுத்தும்) பெருமக்கள் கூட்டத்தினின்று, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும்.”5 அவரது இந்த வழிகாட்டுதலை தமிழக அரசு ஏற்றுள்ளது என்பதை, "1998 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் 'தமிழ் இலக்கண நூலினை மீண்டும் உருவாக்க வல்லுநர்களைக் கொண்ட இலக்கணக்குழு அமைக்கப்படும்' என்ற அறிவிப்பிலிருந்து அறியலாம்.


சான்றெண் விளக்கம்
1. வா.செ. குழந்தைசாமி, அறிவியல்தமிழ், பக்.90 91
2. வா.செ. குழந்தைசாமி, அறிவியல்தமிழ், ப.92
3. வா.செ. குழந்தைசாமி, தாய்மொழி பெறாததைச் சமுதாயம் பெறாது ப.102
4. வா.செ. குழந்தைசாமி, தமிழ் எழுத்துச் சீரமைப்பு, பக் 51 525. வா.செ. குழந்தைசாமி, தாய்மொழி பெறாததைச் சமுதாயம் பெறாது ப.115

Monday, August 9, 2010

தமிழ் மரபின் அடையாளம் கோலங்களின்

தமிழ் மரபின் அடையாளம் கோலங்களின்
கணிதவியல் இயல்புகள் – ஒரு மீள் பதிவு


முனைவர். திருமதி. அ. பெத்தாலெட்சுமி,
இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
கணினி அறிவியல் துறை,
எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி,
திண்டுக்கல்.

திருமதி. இரா. இராஜ இராஜேஸ்வரி,
உதவிப்பேராசிரியர், கணினி அறிவியல் துறை,
எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி,
திண்டுக்கல்.


1. முன்னுரை
கோலங்கள் தமிழ் மரபின் அடையாளம். வட இந்தியாவில் ரங்கோலி, கேரளாவில் பூவிடல், ஆந்திரப் பிரதேசத்தில் முக்குலு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பெற்றாலும் தமிழில் கோலங்கள் என அழைக்கப்படும் வெண் சித்திரங்கள் சிறப்பியல்புகள் கொண்டவை. குறிப்பாக மார்கழி, தை மாதங்களில் செவிக்கு திருப்பாவை கீதங்களும் கண்களுக்கு பல்வகைக் கோலங்களும் என இயற்கையைக் கொண்டாடுபவர்கள் தமிழர்கள். அது மட்டுமின்றி கோலங்கள் தமிழ் மரபின் ஒரு முக்கிய அங்கமாக விழாக்களிலும் சிறப்பான வைபவங்களிலும் திகழ்கிறது.

கோலங்களோடு விழாக்கள் மட்டுமல்ல சூழலியல் சிந்தனைகளும் சமூகக் கோட்பாடுகளும் இணைந்துள்ளன. பண்டைய காலத்தில் வெண்ணிற அரிசி மாவு கொண்டே கோலங்கள் இழைக்கப்பட்டன. எறும்புகளுக்கு உணவாகவே அரிசி மாவு பயன்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாகினும் கோலங்கள் இழைக்கப் பெற்ற இல்லங்கள் விருந்தினர்க்கு நல்ல வரவேற்பையும் பொருந்தும் சூழலையும் கொடுக்கும் என்பது விருந்தோம்பலை அறமாகப் போற்றிய தமிழருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. கோலங்களின் இத்தகைய சிறப்புப் பண்புகள் அரண்மனையைத் துறந்த கௌதம புத்தரைக்கூட இக்கலையைப் பயில வைத்திருக்கிறது [2,3,5]. தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு கோலங்களை பதிவு செய்திருக்கின்றன என்பது பற்றிக் காண்போம்.

2. தமிழ் இலக்கியங்களில் கோலங்கள்
வெகுசில தமிழ் இலக்கியங்களே கோலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து பதிவு செய்திருக்கின்றன. பழந்தமிழ் நூல்களான நிகண்டுகளில் கோலங்கள் பற்றிய குறிப்புகள் இல்லை என்று [8] கூறுகிறது. கோலங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படும் இலக்கியங்கள் நான்கு: நாச்சியார் திருமொழி, கம்பராமாயணம், மீனாட்சியம்மை குறம் மற்றும் குற்றாலக்குறவஞ்சி. சான்றுக்கு சில வரிகள் :
“வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்றன் மேல்“
- நாச்சியார் திருமொழி

“தலைமெழுகு கோலமிடு முறை பெறவே
கணபதிவை அம்மே“
- திருக்குற்றாலக்குறவஞ்சி

தமிழர் வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்தது; அறிவியலையும் உள்வாங்கியது. அவ்வாறாகில் கோலங்கள் வெறும் வெண்சித்திரங்களா? இல்லை அதையும் தாண்டிய அறிவியல் பரிமாணம் கோலங்களுக்கு இருக்கிறது. கணிதவியலாளர்கள் பலரும் குறிப்பாக மறைந்த சென்னை கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் கிஃப்டசிரோமெனி இது குறித்து செய்த ஆய்வுகள் ஆங்கிலத்தில் உள்ளன. அவரது குழுவினர் மட்டுமின்றி வெளிநாட்டு ஆய்வாளர்களும் கோலங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர் [12]. அவற்றின் மீதான தமிழ் மீள்பதிவு பின்வரும் பத்திகளில்.

3. கோலங்களின் எளிய கணிதவியல் பண்புகள்
புள்ளிகளை ஒரு சட்டகம் ஆகக் கொண்டு ஒரு புள்ளியில் ஆரம்பித்து இடைவிடாது பல புள்ளிகளைக் கடந்து பின்பு அதே புள்ளியில் இணையும் ஒரு கம்பிக் கோலங்களே மூலக் கோலங்கள். மற்ற கம்பிக் கோலங்கள் காலப் பரிணாம வளர்ச்சியில் மூலக் கோலங்களில் மாற்றம் கண்டவை. இந்த ஆய்வு மூலக் கோலங்களை மட்டுமே மையமாகக் கொண்டது.

பெரும்பாலான கோலங்களின் முக்கியக் கூறு கணிதவியல் பண்பான (Symmetry) சமச்சீர்மை ஆகும். இக்கோலங்களை 90º , 180º, 270º கோணங்களில் சுழற்சி செய்தாலும் மாற்றங்கள் எதுவுமில்லை. புள்ளிக் கோலங்களின் அடிப்படை அலகு (Basic Unit) கம்பிகளின் முடிச்சு. கணிதவியலில் ஒரு வளைவரையான (Curve) Folium of Descartes - ஐ (படம் 1) ஒத்து இருக்கிறது. இதன் சமன்பாடு.
x3 + y3 – 3axy = 0 ஆகும்.

படம் -1


3.1 கோலங்களும் கோட்டுருக்களும்
ஒரு கோலத்தை கோட்டுருவாகவும் (Graph) கொள்ள முடியும் [11]. ஒரு கோலத்தில் உள்ள கம்பிக் குறுக்கிடல்களை புள்ளிகளாகவும் (Vertices) அவற்றை இணைக்கும் கோடுகளைக் கம்பிகளாகவும் (edges) கொள்ளலாம்.


கோலம் இணையான கோட்டுரு
படம் -2

இவற்றை ஆராயும் போது ஒரு ஆச்சரியத்தக்க உண்மை தெளிவாகிறது. பெரும்பாலான ஒரு கம்பிக் கோலங்களுக்கு சமமான கோட்டுருக்கள் எல்லாமே ஆய்லரின் கோட்டுருக்களாகவே [6] உள்ளன.


3.2. புள்ளிகளும் கம்பிகளும்
கணிதவியலில் பல வகை வளைவரைகள் இருப்பதைப் போலவே பல்வகை கோலக் குடும்பங்களும் உள்ளன. உதாரணங்கள் ஆசனப்பலகை, மிட்டாய்ப்பெட்டி, பாரிஜாதம் போன்றவை. இவ்வகைக் குடும்பங்களில் அடிப்படைப் பாங்கு (Basic Pattern) ஒன்று இருக்கும். அதிலிருந்து பெரிய கோலங்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.
இவற்றில் மிட்டாய்ப்பெட்டி என்றழைக்கப்படும் கோலக் குடும்பத்தைச் சோ்ந்த ஒரு கோலத்தை (படம்-3) முதலில் ஆராயலாம். இந்தக் கோலம் பின்வரும் பொதுவான விதிகளுக்கு உட்பட்டதாய் அமைந்துள்ளது.
1. ஒவ்வொரு கோலமும் புள்ளிகள், கம்பிக் குறுக்கிடல்கள் (Crossings) மற்றும் கம்பிக் குறுக்கிடல்களை இணைக்கும் கம்பிகள் (Edges) கொண்டதாய் இருக்கும்.
2. கோலக் கம்பிகளால் வரையறுக்கப்பட்ட எல்லா வெளிக்குள்ளும் ஒரே ஒரு புள்ளி மட்டுமே இருக்கும்.
3. ஒவ்வொரு குறுக்கிடலிலும் சரியாக நான்கு கம்பிகள் இருக்கும்
இந்த சிறிய கோலத்தின் எளிய பண்புகளைப் பற்றி முனைவர் கிஃப்ட் சிரோமெனி [8] பின்வருமாறு வரையறுத்துள்ளார். புள்ளிகளின் எண்ணிக்கையை a எனவும் கம்பிக் குறுக்கிடல்களின் எண்ணிக்கை c எனவும், கம்பிகளின் எண்ணிக்கையை e எனவும் எடுத்துக் கொள்வோம்.



படம் -3


படத்தில் காணப்படும் கோலம் மேலே சொல்லப்பட்ட கணிதவியல் பண்புகளை நிரூபிக்கிறது. மேற்சொன்ன மூன்று விதிகளை இசைவு செய்யும் கோலங்கள் எல்லாவற்றுக்குமே மேலே நிரூபிக்கப்பட்ட கணிதவியல் பண்புகள் பொருந்தும்.


3.3 கோலத்தை எளிதாக்கும் கணிதம்
தாமரை மலரை ஒத்த தோற்றத்தை உடையது இருதயக் கமலம் என்னும் பெயர் கொண்ட கோலம். மிகவும் சிறப்பான கோலம் எனப் பெயர் பெற்றது. பார்வைக்கு மிக சாதாரணமாகத் தோன்றினாலும் அங்கேயும் இருக்கிறது கணிதம். பொதுவாக அறியப்பட்ட இருதயக்கமலம் எனும் கோலம் எட்டுக் கரங்களையும், ஒவ்வொரு கரத்திலும் ஐந்து புள்ளிகளையும் கொண்டது.


இவற்றை மீள்செய்தல் (repetition) எனும் முறைப்படி வரைவதற்கு ஒரே ஒரு (Tracing sequence) சுவடு தொடர் தான் [9] தேவைப்படுகிறது. அந்தத் தொடர் <1> ஆகும். அதைப் பின்வரும் சித்திரங்கள் காட்டும்.



படம் -4


வரைவதற்கும் நினைவில் கொள்வதற்கும் கடினமான இந்தக் கோலம் கணிதத்தால் எளிதாக இருக்கிறது.
4. கோலங்களும் ஃபிபோனசை எண்களும் (Fibonacci Numbers)
கணிதவியலின் தனித்துவம் மிக்க எண்களில் ஒரு வகை ஃபிபோனசை எண்கள். 0,1,1,2,3,5 ..... என்பது சிறப்புமிக்க ஃபிபோனசை தொடர். இதன் வரையறை பின்வருமாறு: இந்தத் தொடரின் முதல் இரண்டு உறுப்புகள் 0,1. இதில் மற்ற எந்த உறுப்பை எடுத்துக் கொண்டாலும் அது அதற்கு முந்தைய இரு உறுப்புகளின் கூட்டுத் தொகைக்கு சமமானதாக இருக்கும். கணிதவியலின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்
Fn = Fn -1 + Fn -2,
ஆரம்ப மதிப்புகள் F0 = 0, F1 =1 என்பதாக இருக்கும். இவை இயற்கையோடும் இயைந்த எண்கள் ஆகும். இயற்கையின் பல படைப்புகள் ஃபிபோனசை எண்களோடு தொடர்புடையதாகவே இருக்கின்றன.
(உ.ம்) பூ இதழ்கள்.
பெரும்பாலான பூ இதழ்களின் எண்ணிக்கை [1] ஃபிபோனசை எண்களாவே உள்ளன. இவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஃபிபோனசை எண்கள் கோலங்களோடும் இணைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தமிழகக் கோலங்கள் 5x5, 8x8, 13x13 என்று ஃபிபோனசை எண்களையே ஒத்துள்ளன. இத்தகைய கோலங்களில் பின்வரும் நான்கு விதிகளுக்கு உட்பட்ட கோலங்களை ஆய்வு செய்து அவற்றின் கணிதவியல் கூறுகளைப் பின்வருமாறு கூறியிருக்கிறார் பேராசிரியர் எஸ். நாரணன் அவர்கள் [13]:
விதி 1 : கோலங்கள் சதுர மற்றும் செவ்வக சட்டகங்களைக்
கொண்டதாக இருக்க வேண்டும்.
விதி 2 : 90◦, 180◦, 270◦ கோணச் சுழற்சிகளால்
கோலங்களுக்கு மாற்றம் ஏற்படக் கூடாது
விதி 3 : கோலக் கம்பிகளுக்கிடையேயான வெளியில்
கட்டாயம் ஒரு புள்ளி இருக்க வேண்டும்.
விதி 4 : ஒரு கம்பிக் கோலமாக இருக்க வேண்டும்
ஏதேனும் நான்கு தொடர் பிபோனசை எண்களை எடுத்துக் கொள்ளவும். Q = (a, b, c, d) (உ.ம்) (2,3,5,8). இவை பின்வரும் தொடர்பைக் கொண்டிருக்கின்றன. bc = b2 + ab, d2 = a2 + 4bc. இவற்றின் நிரூபணங்கள் மற்றும் மேலும் பல கணிதச் செய்திகள் [13] aaகட்டுரையில் உள்ளன.
அதாவது bxc என்ற செவ்வகக் கோலம் b2 என்ற சதுரக் கோலம் மற்றும் axb என்னும் செவ்வகக் கோலத்தைக் கொண்டிருக்கிறது. அதே போன்று d2 என்னும் சதுரக் கோலம் a2 என்னும் சிறு சதுரக் கோலத்தையும் நான்கு bxc செவ்வகக் கோலங்களையும் கொண்டிருக்கிறது.
(உ.ம்)

52 = 12 + 4 (2x3) 3x5 = 32 + 2x3
படம் -5
இதை கணிதவியல் குறியீட்டு முறைப்படி Fn-2F n-1 = F2 n-2+ F n-3 F n-2 (n >2) எனவும் F2 n = F2 n-3+ 4 F n-2 F n-1 எனவும் வரையறுக்கலாம்.
ஃபிபோனசை எண்களை அடித்தளமாக்கி கொண்டு கோலங்களை பிறப்பாக்கும் புதிய படிமுறை (algorithm) இதோ :
படி : 1. ஏதேனும் ஒரு ஒற்றைப்படை எண்ணை எடுத்துக் கொள்ளவும்.
(உ.ம்) n=9
படி : 2. ஃபிபோனசை எண்களை α=0 முதல் எண்ணாகவும் அடுத்த எண் β =1 என்றும் ஆரம்பித்து ஒற்றைப்படை எண் வரை
(n=9) உருவாக்க வேண்டும்.
படி : 3. n புள்ளிகளை உருவாக்கி கொண்டு அதில் ஃபிபோனசை
எண்களை நிரப்ப வேண்டும்.
படி : 4 தொடங்குக.
படி : 5 முதல் மூன்று புள்ளிகளை எடுத்துக் கொண்டு (ஃபிபோனசை
எண்கள் 0,1,1) நடுவில் ஃபிபோனசை எண் 0 வை (புள்ளி 1) வைத்து இரண்டு புறமும் புள்ளிகள் 2 மற்றும் 3யை இணைக்கவும்.
படி : 6. இதே போல் அடுத்த மூன்று புள்ளிகளை தோ்வு செய்வதற்கு
முதல் புள்ளியாக முன்பு எடுத்த மூன்றாவது புள்ளி இருக்க வேண்டும் (உ.ம்) (3,4,5). இதற்கு ஒவ்வொரு புள்ளியின் ஃபிபோனசையின் மதிப்பையும் முந்தையப் புள்ளியின் மதிப்பிலிருந்து கழிக்க வேண்டும்.
படி : 7. கடைசி வரை இதே போல் செய்யவும்.
மேலே சொல்லப்பட்ட படிமுறையை செயல்படுத்தி, n=9 என்ற
மதிப்பிற்கு பின்வரும் கோலங்கள் கிடைக்கிறது.




இலைக்கோலம் பூக்கோலம்
படம் – 6


இவை கணிதவியலின் கூறுகள் மட்டும் அல்லாது கணினி அறிவியலில் காணப்படும் கூறுநிலை செய்நிரலாக்கத்துக்கும் (modular programming) சான்றாக விளங்குகின்றன. அதாவது ஒரு பெரிய மென்பொருள் சிக்கலை எவ்வாறு பகுத்து சிறு சிறு சிக்கல்களாக்கி அவற்றைத் தீர்ப்பதன் மூலம் மொத்த தீர்வை அடையலாம் என்னும் கருத்தாக்கத்துக்கு உதாரணமாக இவற்றைக் கொள்ளலாம்.
அடுத்து கணினி அறிவியலின் அடித்தளமான முறையமைவு மொழிகளுடன் (Formal Languages) கோலங்கள் எப்படி தொடர்புள்ளதாக உள்ளன என்று ஆராயலாம்.


5. கோலங்கள் பேசும் சித்திர மொழிகள்
1950 களில் நோவாம் காம்ஸ்கி மொழியியலில் ஒரு மறுமலர்ச்சியைக் கொண்டு வந்தார். பேச்சுமொழிகளை(Natural Languages ) நவீன கணித முறைகளின்படி வரையறுத்தார். கணினி பயன்பாட்டிற்கான மொழிகளுக்கான இலக்கணங்களையும் முறையாக வகுத்து அவற்றை அடித்தளமாகக் கொண்டு முறையமைவு மொழிகளின் (Formal Languages ) படிமரபை ( Hierarchy) ஸ்தாபித்தார். ஒரு முறையமைவு மொழி என்பது வார்த்தைகளை உறுப்பினர்களாகக் கொண்டது. இதில் வார்த்தைகள் என்பது எழுத்துக் கணத்தில் (Alphabet) உள்ள உறுப்பினர்களைக் கொண்டு ஒரு முறையமைவு இலக்கணத்தின் விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட சரங்களாகும் (Generated strings ). (உ.ம்) L = { anbn / n ≥ 1}
இங்கே எழுத்துக் கணம் Σ = {a>b}. இம்மொழியின் சில வார்த்தைகள் ab>
a2b2, a3b3. இவை ஒரு பரிமாணம் கொண்டவை. இவற்றை இரு பரிமாணங்களுக்குக் கொண்டு செல்லும் போது சித்திரமொழிகள் உருவாகின்றன.
சித்திரமொழி என்பது சித்திரங்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கணமாகும். இதில் சித்திரம் என்பது எழுத்துக்களால் ஆன ஒரு இரு பரிமாண அணியாகும். (உ.ம்) L = { / வலது / { a^ {n>n} / n> 0 } இடது /} இந்த சதுரங்களின் மொழி a a என்னும் எழுத்தால் ஆனது. இதில் உள்ள சில சித்திரங்கள்


a a a a a a
a a a a a
a a a


இந்த மொழிகளை உருவாக்கும் இலக்கணங்களுக்கு அணி இலக்கணங்கள் என்று பெயர் (array grammars). இந்த சித்திர மொழிகளை கோலங்களோடு இணைத்து பல ஆய்வுகள் [7,10] மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
கோலங்களில் பலவகைக் குடும்பங்கள் உள்ளன. அதில் சிறப்பான ஒன்று கிருஷ்ணரின் சதங்கை. அக்கோலக்குடும்ப உறுப்பினர்கள் சில பின்வருமாறு:.



படம் -7
மேலே சொல்லப்பட்ட கோலங்களை சித்திர மொழிகளோடு ஒப்புநோக்கி பின்வரும் முடிவுகளைக் கூறியிருக்கிறது ஒரு ஆய்வு [12]. முதலில் சில குறியீடுகளைப் பார்க்கலாம்.


வெற்றிடம்
A B C


இந்தக் குறியீடுகளை எழுத்துக் கணமாகக் கொண்டு கோலச்சித்திரங்களை பின்வருமாறு உருவாக்கலாம்.

அதாவது Σ = {A>B>C}
A B A B
A C A
B A B
படம் -8
இரு பட வரிசைகளையும் (படம் -7 மற்றும் படம் -8) ஒப்பு நோக்குகையில் கோலங்களுக்கும் சித்திரமொழிகளுக்குமான இணைவு தெரிகிறது. இவற்றின் பயன்பாடு பாங்கு கண்டறிதல் (Pattern Recognition) மற்றும் கணினி வரையம் (Computer Graphics) துறைகளில் உள்ளது. இவ்வகைக் கோலங்களை இடிஓஎல் சுழற்சி இலக்கணம் கொண்டும் [14] உருவாக்க முடியும். இவை மட்டுமின்றி குலக்கொள்கை (Group theory), போன்ற இன்னும் பல துறைகளோடும் தொடர்புடையனவாக உள்ளன கோலங்கள். கோலங்களையும் கணிதவியலையும் இணைத்த இந்த ஆய்வின் நிறைவாக சில வரிகள்.


6. முடிவுரை
முந்தைய பத்திகளில் ஆராயப்பட்ட கோலங்களின் கணிதவியல் பண்புகள், கோலங்களை கணினி முறையில் பதிவு செய்யவும் உருவாக்கவும் பயன்படும் [14]. அது மட்டுமின்றி கலாச்சார மாற்றத்தால் தமிழகத்தின் பாரம்பரிய முகம் மாறிக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பெருநகரமாக மாறியிருக்கும் தமிழகத் தலைநகர் சென்னையில் கோலமிடும் முறை அரிசிமாக்கோலத்திலிருந்து சுண்ணாம்பு பொடிக்கோலம், ஒட்டுக்கோலம் என்று கோலம் சார்ந்த உயிர்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. நவீன மேலாண்மை உத்தியான பணிவெளியிடக் கொடுத்தல் (Outsourcing) என்ற முறை இல்லத்தின் முன் கோலமிடும் பணியிலும் நுழைந்து விட்டது. இச்சூழலில் மரபுகள் அழியாது காக்கப்பட வேண்டியவை. அடுத்த தலைமுறையினருக்கு அர்த்தத்தோடு விட்டுச் செல்லப்பட வேண்டியவை. இந்தப் பணியை கம்பீரமாக எழுந்திருக்கும் புதிய தமிழக சட்டசபைக் கட்டிடம் [4] செவ்வனே செய்கிறது. பாரம்பரியமும் நவீனமும் கலந்து நிற்கும் அக்கட்டிடத்தில் அமைந்துள்ள பொதுவெளியில் (Public Plaza) கீழே படத்தில் கண்டுள்ள கோலத்தின் பதிவுகள் 2300 சதுர அடியில் காணப்படுகின்றன. மேலும் இவ்வளாகத்தின் நுழைவாயில் அருகே உள்ள உலோகத் திரையில் 10,000 சதுர அடி கோலப்பதிவுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.



படம் -9


இது அடுத்த தலைமுறையினர் பாரம்பரியக் கோலங்களை அவற்றின் அழகியல் மதிப்புகள் (aesthetic values) தாண்டி கணிதச் சுவை சேர்த்து மீள்பார்வை (review) செய்ய உதவி செய்யும். எனவே தமிழ் மரபின் அடையாளமான கோலங்கள் பற்றிய இந்த ஆய்வு ஒரு ஆரம்பப் புள்ளியே. இது தொடர வேண்டும். தொடர்வதால் கிடைக்கும் ஆய்வின் முடிவுகள் நிச்சயம் தமிழ் மரபின் அடையாளமான கோலங்களை பதிவு செய்தல் மட்டுமின்றி தமிழர்களின் கணிதவியல் பங்களிப்பு தகவல்களையும் உலகுக்கு வெளிக்கொணரும்.

துணைநூற்பட்டியல்

1. britton. disted. camoscen.bc.ca/fibslide/jbfibslide.ht
2. http://www.ikolam.com/
3. www.manyzone.com/festivals/ pongal
4. http://popupwindow.blogspot.com/
5. en.wikepedia.org/wiki/kolam
6. S. அமானுல்லா, கோல இயல், பாவை பப்ளிகேஷன்ஸ், பக்கம்.43, டிசம்பர் 2007.
7. Dr. Gift Siromeny et al “Array languages and Kolam”, Computer Graphics and Image Processing, 1974.
8. Dr.Gift Siromeny, South Indian, Kolam Pattern, Kalakshhetra Quarterly Vol. 1, No1. 9-14, April 78.
9. Dr.Gift Siromeny et al., On Understanding Certain Kolam Designs, Second International Conference on Advances in Pattern Recognition and Digital Technique, Indian statistical Institute, Calcutta. Jan. 6-9, 1986.
10. Dr.Gift Siromeny et al., Kambi Kolam and Cycle Grammar, Web Literature.
11. A.S. Ismail et al., Some Applications of Eulerian Graphs, Sutra, International Journal of Mathematics Science Education, Vol. 2, No.2, 1-19,2009.
12. Marcia Ascher, Mathematics Elsewhere : An Exploration of Ideas Across Cultures, Princeton University Press, 2002.
13. Dr. S. Naranan, Kolam Designs based on Fibonacci Numbers Part I : Square and Rectangular Designs, http://www.vindhiya.com/.,
14. R.Narasimhan, A Perspective in Theoretical Computer Science, Commemorative Volume for Gift Siromeny, World Scientific Publishing Co, pvt., Ltd., Singapore. 1989.

Saturday, July 31, 2010

பல மொழிகளுக்குத் தமிழே மூல வரிவடிவம்


பல மொழிகளுக்கு தமிழே மூல வரிவடிவம்

முருகேசு பாக்கியநாதன். B.A


நோக்கம்
தமிழ் மொழியின் சொல் வளத்தினாலும்; அதன் வரிவடிவத்தினாலும் தோற்றம் பெற்றதுமான பல இந்திய மொழிகளுக்கும், அண்டை நாடான இலங்கையின் பெரும்பான்மை இன மொழியான சிங்கள மொழியினுக்கும்;;, தமிழ் வரிவடிவமே அம்மொழிகளின் தோற்றத்திற்கு ஆதாரமாகவும் மூல வரிவடிவமாகவும் இருந்தது என்பதனை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அதனை ஆராயும்போது தமிழின் தொன்மை, அதன் வரலாறு அதன் மொழி வரிவடிவத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அத்தோடு அம்மொழி வரிவடிவம் ஏனைய மொழிகளின் வரிவடிவத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தியது என்பதனை நோக்குவதே இக்கட்டுரையாகும்;;.


தமிழின் வரலாறு இற்றைக்குப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு லெமூரியா தொடங்கி சிந்துவெளி நாகரீக காலத்திலிருந்து முழு இந்தியாவிலும் மற்றும் முழு இலங்கையிலும்; செழித்தோங்கிய மொழியாகவே இருந்துள்ளது. லெமூரியா இன்று எம் முன் இல்லாமல்; மறைந்து போயிருந்தாலும் தமிழ்மொழி பற்றிய உண்மையான வரலாறு 6000 ஆண்டுகளிலிருந்து சி;ந்துவெளியிருந்து எமக்குக் கிடைக்கப்பெறுகின்றது. இந்த வகையான தொன்மையும், வரலாறும், ஆதாரமும் கொண்டதான மொழிகள் உலகில் மிகச் சிலவே.


தமிழும் திராவிடமும்
தமிழும் திராவிடமும் என்ற இரு பதங்கள் ஒரு கருத்தையே பிரதிபலிக்கின்றன. தமிழ் என்பதன் உச்சரிப்பே காலப்போக்கில்; திரிபடைந்து திராவிட என்று மாறியதாக அறிஞர் பெருமக்கள் கொள்ளுவர்;.
திராவிடம் என்ற சொற்பதத்தினை றெபேட் கால்டுவெல் அவர்களே 1856ல் திராவிட மொழிகளுக்கான ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலில் முதன் முதலில் பயன்படுததினார். திராவிட மொழிக் குடும்ப மொழிகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு, கொடகு, துத, தோத, கோந்தி, கூய், ஓரான், ராஜ்மஹால் ஆகிய 12 மொழிகளைத் தெரியப்படுத்தினார். இக்குடும்பத்திற்கு தாய் மொழியாக தமிழேயென அறிய முற்பட்டுள்ளார்.
இதன்பின்பு நடைபெற்ற ஆராச்சிகளின்போது பின்வரும் மொழிகளும் அதனுள் அடக்கப் பெற்றன. அவையாவன பிரகூய், கொலாமி, நாய்க்கி, குவி, கோண்டா, கட்பா, குரூக், ஒல்லாரி, கோயா, மோல்டா, பார்ஜி, கதபா, பெங்கோ, இருளா, கொடகு, குறவா, தோடா, படகா, ஆகியனவாகும். இதில் காட்டப்பட்ட பிரகூய் மொழியானது இந்தியாவிற்கு வடக்கேயுள்ள பலுகிஸ்தானினும் ஆப்கானிஸ்தனிலும் பாகிஸ்தானின் ஒரு சிறுபகுதியில் பேசப்படும் மொழியாகும். அத்தோடு பாகிஸ்தானிய பல்கலைக் கழகத்தில் பயிலுவதற்கான விருப்புப் பாடமாகவுள்ளது. இம்மொழிகள்; தாய்த் திராவிட மொழியிலிருந்து பேசப்பட்ட பிராந்திய மற்றும் இனக்குழுமங்களின் மொழிகளாக அறியப்பட்டுள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகிய மொழிகளின் இலக்கண ஓப்புமைகள், சொல் ஒப்புமைகள் பற்றி ஏராளமான தரவுகளை கால்டுவெல் அவர்கள் தந்துள்ளார்.
கால்டுவல் கோடிட்டுக் காட்டியதை மேலும் ஆராந்து மாந்த இன முதன் மொழி ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும் எனவும், மிகு தொன்மை வாய்ந்த தமிழே அனைத்து மொழிக் குடும்பங்களுக்கும் (இந்தோ-ஆரிய மொழிகள் உட்பட) மூலமான மொழியாகக் கருதப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை மாறல் கார்த்திகேய முதலியார் 1913இலும், கா.சுப்பிரமணியபிள்ளை 1920களிலும், நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் 1930, 1940 களிலும், ஞா. தேவநேய பாவாணர் 1940- 1980 களிலும் மிக விரிவாக ஆராந்து நிறுவியுள்ளனர்;. ஆதாரம் 1.


லெமூறியாவில் திராவிடன்
இன்றை ஸ்ரீ லங்கா அடங்கலாக பாண்டியத் தமிழ் பேரரசே கோலோச்சி தமிழர்களே ஆதிக்குடிகளாக இருந்துள்ளனர். இதற்கு முந்திய காலப்பகுதியிலேயே நாகர்கள் என்றழைக்கப்பட்ட மனிதஇனம் வாழ்ந்துள்ளதாக லெமூறியா பற்றி ஆராந்த அறிஞர்கள்; ஆராச்சிக் கட்டுரைகளின் மூலம் தெரிவித்துள்ளார்கள். இவர்களைப் பாம்பு மனிதர்கள் (Snake People) என அழைத்துள்ளார்கள். இவர்கள் பற்றி அவர்கள் கூறும்போது பாம்பு மனிதர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் மிக மிக ஆதிகாலத்தில் எறத்தாள 10000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களாவர். அவர்களே லெமூறியாவின் தொன்மையான குடிகள். பாம்பு மனிதர்களே உலகில் பதிவுகள் பற்றிய அறிதலை விட்டுச் சென்றவராவர். பாம்பு என்பது ஒரு குறியீடே இது உலகியலில் அதி விவேகத்தினைக் குறிக்கும் குறியீடென அறியப்பட்டுள்ளது. ஆகவே பாம்பு மனிதன் என்று அவர்கள் குறிப்பிடுவது நாகர்களையே ஆகும். அவர்களே தமிழனின் பரம்பரையினர். அன்றே அவன் எழுத்தை அறிந்து வைத்து அதனைத் தமது பதிவுகளுக்குப் பயன் படுத்தியிருக்கிறான் என்ற ஒரு செய்தி இங்கிருந்து கிடைக்கின்றது.
லெமூறியாவின் எஞ்சிய பகுதிகளான தென்இந்தியா, இலங்கை, வடமேற்கு அவுஸ்ரேலியா ஆகிய இடங்களில் திராவிடர்களின் பரம்பரையினரே இன்றும் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வடமேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் ஆதிக்குடிகள் பற்றி ஆய்ந்தபோது பெறப்பட்ட உண்மைகள் அதிசயிக்க வைத்தன.

அவுஸ்ரேலியாவின் வடமேற்குப் பகுதியில் தற்போதும் வாழும் கரிறியா என்னும் ஆதிக்குடிகள் ஆதித் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியும் என எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு அவர்களது உருவத் தோற்றப்பாடு; ஆதாரமாயுள்ளது. அத்தோடு அவர்களது மொழியிலும் திராவிட மொழியின் சாயலும் இலக்கண, ஒலியன் ஒற்றுமைகள் உள்ளதாக கு.அரசேந்திரன் குறிப்பிடுகின்றார். ஆதாரம்;: தமிழ்க்கப்பல் பக்3. குமரிக் கண்ட நிலத்தொடர்பு இருந்த காலத்திலேயே ஆதித் திராவிடர் குமரிக் கண்டத்திலிருந்து புலம் பெயர்ந்து உணவு தேடி வேட்டையாடும் நோக்கோடு வேறொறு பிரதேசத்திற்குச் சென்றுள்ளார்கள்.


மேலும் அங்குள்ள சில ஆதிக்குடிகளின் சில இனக்குழுமங்களின் பெயர்கள் வியப்புத்தருவதாகவும் மேலும் ஆராயப்பட வேண்டியதனையும் வலியுறுத்துகின்றது. அவையாவான குவினி இது இலங்கையின் இயக்கர் இனப்பெண்ணான குவேனியின் பெயரை ஒத்திருக்கின்றது. இவரையே இந்தியாவின் கலிங்கத்திலிருந்து துரத்தப்பட்ட கலிங்கத்து இளவரசனான விஜயன்; மணம் முடித்தார் என மகாவம்சம் கூறுகின்றது. மேலும் அவுஸ்திரேலிய ஆதிக் குடிகளின் சில குழுக்களின் பெயர்களான நகர, நன, நந்தா, நங்கா, நகரியா, நகுரி, நகண்டி, நகம்பா என்ற பெயர்களை நோக்கும போது நாகர் என்ற பெயருடன் தொடர்பட்டது போன்றும் ஏதொவொரு அறிந்த பெயரான தமிழ்ப் பெயர்கள் போலவும் இருக்கின்றது. – ஆதாரம்: விக்கிப்பிடியா தேடுதளம். இக்காரணத்தினாலும்;; லெமூறியாவில் தமிழன் வாழ்ந்தான் என்பதற்குரிய ஒரு ஆதாரமாகக் கொள்ள முடியும். குமரிக்கண்டத்தில் வாழ்ந்தவனின் இறுதிக் குடிகளே அதன் எஞ்சிய பகுதிகளான இலங்கையிலும் இந்தியாவிலும் வடமேற்கு அவுஸ்ரேலியாவிலும் 10,000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதிக்குடிகளாவர்.


அவுஸ்ரேலியாவின் சில ஆதி இனக்குழுமங்களின் மரபணுக்கூறுகள் (டீ.என்.ஏ) ஐ.நா சபையினால் ஆராயப்பட்டுள்ளன. திரவிட இனத்தொடர்பு இருப்பதாக நாம் கருதும் இனங்களின் மரபணுக்கள் பரிசோதிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். இதற்கு தமிழ்நாட்டு அரசு நிதியொதுக்கி இச்செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கவேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.





மேற்கு அவுஸ்ரேலியாவில் வாழும் திராவிட ஆதிக்குடிகள்


திராவிடனின் மூதாதையர்கள் - நாகர்களும் இயக்கர்களும்
இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்த ஆதிமக்களை நாகர்கள் மற்றும்; இயக்கர்கள் என மகாவம்சம் என்ற பௌத்த நூல் கூறுகின்றது. இந்த இரண்டு இனங்களும் திராவிடரின் மூதாதையராவேயிருக்க முடியும். நாகர் என்ற இனம்; வாழ்ந்த வாழ்க்கை நாகரிகம் என்றும், அவர்கள் வாழ்ந்த இடம் நகரம் என்றும் அவர்கள் பேசிய மொழி நகரி என்றும் உருப்பெற்றது. இதனை ஒத்த தமிழ் பெயர்களே நாகராசா, நாககன்னி, நாகதுவீபம் அல்லது நாகதீபம், நாகவிகாரை, நாகர்கோவில், நாகபட்டினம், நாகர்லாந்து என்ற பெயர்களாகும். நாகர் இனத்திலிருந்தே இப்பெயர்கள் தோன்றியருக்க வேண்டும். ஆரியர் இந்தியாவை ஆக்கிரமித்தபோது நாகர்களிடமிருந்தே எழுத்து முறையினைக் கற்றிருக்க வேண்டும். இதனாலேயே அங்கு வாழ்ந்த மூதாதையராகிய நாகர்களின் மொழியாகிய நகரியை தங்கள் மொழிப் பெயராக தேவ என்னும் இறைவன் பெயர் சார்ந்த அடைமொழியினைச் சேர்த்து தேவநகரி என பெயர் சூட்டிக்கொண்டனர்.


சிந்துவெளித் தமிழ்
தமிழ் இனமானது மிகவும் தொன்மையான இனமாக ஆசியாவின் நாகரீகத்திற்கே தோற்றுவாயாக அமைந்த சிந்துவெளியின் மொஹஞ்சதாரோ ஹறப்பா நாகரீத்தின் பிதாமகராகத் திகழ்ந்த திராவிடரின் மூலவேராக இருந்தது. இந்த இனம்; கிறிஸ்துவக்கு முன்பு 6000 ஆண்டுகளுக்கு முன்பு செழுமையுடன் வாழ்ந்த ஒரு இனமாகும். தமிழ் மொழியின்; பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப மொழி வரிவடிவாகிய தமிழ்பிராமியின் வழிவந்ததே தமிழ் என்பதாகும். மேற்கொண்டு தமிழ்பிராமி என்பதனை விடுத்து தமிழி என அழைப்போம்.


இன்று உள்ள தமிழ்மொழித் தோற்ற வரிவடிவம் அப்போது இல்லததிருந்தாலும் அப்போது அறியப்பட்ட திராவிடர் பாவித்த மொழியின் பரிணாம வளர்ச்சியே தற்போது பாவனையில் உள்ள தமிழ் மொழியாகும்;. அவர்கள் பாவித்த மொழி திராவிட தமிழ் மொழியென அறிய பலவித ஆராச்சிகள் உதவியுள்ளன. சிந்துவெளியில் நடைபெற்ற அகழ்வாராச்சியின் போது பெறப்பட்ட சில உலோக முத்திரைகளில் பதிக்கப் பெற்ற பெயர்கள் இன்றும் தமிழில் வழங்கப்படும் தமிழ் பெயராக இருப்பது குறிப்பிடக் கூடியது. உதாரணமாக கூத்தன், தக்கன், அண்ணி, அரட்டன், அப்பன், ஐயன், சாத்தன,; ஐயாவு, கக்கன், கந்தன் - கந்தப்பன், குப்பன் ஆகிய பெயர்கள் சிந்துவெளி நாகரீக புதைபொருள் ஆராச்சியாளர்களின் முறையே 232, 3762, 2190, 157, 2626, 6074, 4195, 7513, 4323, 6120, 2719, 2025 என்;ற இலக்கங்கள் கொண்ட உலோக முத்திரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பம்பாய் வரலாற்று ஆராச்சி நிலையத்தில் சிந்துவெளி ஆய்வினை முன்னெடுத்துச் சென்று ஆய்வு செய்த ( Fr Heras ) ஹெராஸ் பாதிரியார் அவர்களே முதன் முதலில் இது தமிழர்களின் நாகரீகமெனவும் அவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் உலகுககுக் கூறியவர். இவர் சீன நாகரீகத்தினையே சிந்து வெளியின் கிளை நாகரீகம் என்று வெளிப்படுத்தினார். பல சிந்து வெளி எழுத்துக்கள் சீன எழுத்துகளுக்கு வழிகாட்டியாகும் எனவும். தமிழுக்கும் சீனத்திற்கும் உள்ள தொடர்புகள் பற்றி “ சீனம் என்ற செந்தமிழ்” என்ற கட்டுரையில் விரிவுபடக் கூறியுள்ளார்.

பிரகிருதம்
பிரகிருதம் என்பது வடஇந்தியாவிலே ஆதிகாலத்தில் பயன்பாட்டில் இருந்த மொழியாகும். பிரகிருதத்திலேயே அசோகன் பிராமி எழுதப்பட்டிருந்தது. அத்துடன் தேவநகரி பிரகிருதத்திலேயே எழுதப்பட்டது. பிரகிருத மொழிப் பிறப்பினையும் அதன் வழக்கத்தினையும் தேவநேயப்பாவணர் மறுத்துரைத்து பிரகிருதம் என்பது வடக்கில் பயன்படுத்திய வடதிராவிடம் என்றே கொள்ளப்பட வேண்டும் என தனது ஆராச்சியின் போது குறிப்பிடுகின்றார். தேவநேயப்பாவணர் அவர்கள் கால்டுவெல் வழியிலே தொடர்ந்து ஆராச்சிகளைச் செய்து இந்திய மொழிகளில் தமிழே சகல மொழிகளுக்கும் தாய் மொழியென 1900-81 காலப்பகுதியில் நிறுவினார்.


மேலும் சிந்துவெளி முத்திரைகளைவிட அடுத்ததாகக் கண்டுபிடிக்கப்பெற்ற அசோகன் கல்வெட்டு பிரகிருதத்திலேயே எழுதப்பட்டுள்ளது. பிரகிருதம் என்பது வடதிராவிடம் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று அடித்துக் கூறுகிறார் பாவாணர். ஆதாரம்: தமிழ்க்கப்பல், கு.அரசேந்திரன் பக் 46
தென்இந்திய குகைக் கல்வெட்டுக்கள்


தமிழ் எழுத்தின் வரிவடிவம் சிந்துவெளியின் சித்திர வரி வடிவத்தின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்; பின்பு தொடர்ந்து வந்த வரிவடிவங்களின் பரிணாம வளர்ச்சியே இன்று காணப்படும் வரிவடிவமாகும். இதனை மறுப்பவர்களும் உண்டு. சிந்துவெளி நாகரீக காலத்தே பதிக்கப்பெற்ற சித்திரவடிவங்களும் இதனைத் தொடர்ந்து கண்டெடுக்கப் பெற்ற கடலூர், சானூர், கொடுமணல் மற்றும் ஆதிச்சநல்லூர் கல்வெட்டுக்கள் தமிழ் வரிவடிவம் எப்படியாக வளர்ச்சி பெற்றன என்பதற்குச் சான்றாக அமைகின்றன.


இதனைவிட திருநாதன் குன்றத்து கல்வெட்டின் காலம் கி.மு 2ம் நூற்றாண்டு என வரையறை செய்யப்பட்டுள்ளது. இங்கு காணப்பட்ட எழுத்துக்கள் உண்மையான தமிழ் வரிவடிவத்தினைப் பிரதிபலித்தது . பிரம்மகிரி அகழ்வாராச்சிகளானது பெருங்கற்காலத்து மக்கள் கி.மு 5ம் நூற்றாண்டளவில் தென் நாட்டில் வாழ்ந்தாகவும் அவர்கள் திராவிடரகள் எனவும்;, அப்பண்பாட்டின் பண்புகளை சங்க இலக்கியத்தில் காணக்கூடியதாக உள்ளதாக குருராஜராவ் அவர்கள் குறிப்பிடுகின்றார்.


தெ.பொ.மீனாட்ச்சிசுந்தரனாரின் கருத்துப்படி தமிழகத்தில் பெறப்பட்ட கல்வெட்டுக்களின் காலம் கி.மு3ம் நூற்றாண்டு என்பதாகும். இவை தென் பிராமியில் எழுதப்பட்டிருப்பதாகவும் இதே வகையான தென் பிராமி எழுத்து வகையான எழுத்துக்களே இலங்கையில் கண்டுபிடிக்கப் பெற்ற குகைக் கல்வெட்டுக்களாகும்.


இந்திய வரலாற்று நூலை எழுதிய சத்தியநாதையர் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு எழுதும் பழக்கம் கி.மு 2ம் நூற்றாண்டளவில் தொடக்கம் பெற்றாகவே குறிப்பிடுவர். History of India Vol. 1 – P-209. தமிழகத்திலே சமஸ்கிருதத்தில் கல்வெட்டெழுதப் பெற்றது பல்லவ அரசன் வி;ட்டுணுவர்த்தனன் காலமான கி.பி 6ம் நூற்றாண்டிலிருந்து என்கிறார் ஐராவதம் மகாதேவன். – Early History Epigraphy from the times to the Sixth Century AD P-114

தமிழ் வரிவடிவத்தின் வளர்ச்சி
தமிழ் அரிச்சுவடி பற்றி கி.மு 3ம் நூற்றாண்டின் எழுதப்பெற்ற தொல்காப்பியம் பின் வருமாறு கூறுகின்றது.
எழுத் தெனப் படுப
அகர முதல
னகர இறுவாய் முப்பஃதென்ப
சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே
என அ முதல் ன வரையான தமிழ் உயிரெழுத்து பன்னிரண்டுடன் மெய்யெழுத்துமாக முப்பது என இங்கு காட்டுகின்றார். அத்தோடு குற்றியலிகரம், குற்றியலுகரம் அத்துடன் முப்புள்ளியுடைய ஆய்த எழுத்தெனவும் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பியர் ஒரு கருத்தினைச் சொல்ல விளையும்போது அதனை தனக்கு முந்திய புலவர்கள் சொல்வார்கள் என்றும் அதனை என்மனார் புலவர் என்று பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். அப்படியாயின் கி.மு 3ம் நூற்றாண்டிற்கு முன்பு பல காலத்திற்கு முன்பே தமிழில் தொல்காப்பியத்திற்கு முந்திய ஒரு இலக்கணம் இருந்திருக்க வேண்டும் அல்லது இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு செழித்து வளர்ந்த மொழிக்கோ அன்றி செழித்த இலக்கியங்கள் உள்ள மொழிக்கோ மட்டுமே இலக்கணத்தினைப் படைக்க முடியும். ஆகவே கி.மு 500 ஆணடிற்கு முன்பும்; தமிழ் மிகச் சொழிப்புற்று இருந்த ஒரு மொழியாகவே இருநதுள்ளது என கொள்ளமுடியும். அதுவே தமிழ்ப் பிராமி எனப்படும் தமிழி என்பதாகும்.

சித்திர முத்திரைகளின் வரிவடிவம்
சித்திர முத்திரைகளினால் எழுத்துக்கள் எழுதும்போது சில தனியாகவும் சில ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட முத்திரைகள் சேர்ந்தோ ஒரு எழுத்தை அமைப்பதாக கொள்ள முடியும். அதேபோலவே தமிழ் வரிவடிவம் தனிக் கோடுகளாலும், தனி வட்டங்களாலும், பல கோடுகளாலும், பல வட்டங்களாலும் எழுதப்படும் எழுத்துக்களாகும் அந்தக் காரணத்தின் அடிப்படையிலேயே சிந்துவெளி முத்திரைகள் தனியாகவோ அன்றி ஒன்றாகவோ அன்றி ஒன்றிற்கு மேற்பட்டனவாகவோ சேர்ந்து வரிவடிவங்களை அமைக்கிறதென்று கொள்ள முடியும்.

கி.மு.1500 இன் இறுதியிலிருந்த சித்திரவெழுத்து கி.மு 500 ஆண்டுகளில் தமிழியாக வளர்ச்சி பெற்று தொடர்ந்து கி.பி 200 லிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று கிபி400 ஆண்டளவில் வட்டெழுத்தாக மாற்றம் பெற்று மேலும் வளர்ச்சியடைந்த நிலையிலேயே இன்றைய வரிவடிவத்தின் பரிணாம வளர்ச்சித் தோற்றம் பெற்றது.

சிந்துவெளி சித்திர எழுத்திலிருந்து தற்காலம் வரையான தமிழ் அகரத்தின் பரிணாம வளர்ச்சி
சிந்துவெளி சிந்திர வரிவடிவிலிருந்து தமிழ் அகரத்தின் பரிணாம வளர்ச்சியும் அசோகன் பிராமிக்கு அது எவ்வாறாக வித்திட்டது என்பதனை கீழே நோக்கவும். மனித உருவத்திலிருந்தே சிந்துவெளித் தமிழன் தனது அகரத்தினைத் தோற்றுவித்தான். அதன் அவையவங்களை வைத்தே அகரத்தின் பரிணாமவளர்ச்சி வளர்ந்துள்ளது.




1. கிமு 6000 – கிமு1500 வரையான சிந்துவெளி அகரத்தின் சித்திர வரிவடிவம்
2. சித்திர வரிவடிவத்தின் தொடர்ச்சியான அகர பரிணாம வளர்ச்சி
3. கிமு.5ம் நூற்றாண்டிற்கு முந்திய அகரத்தின் பரிணாமம்
4. கி.மு.5ம் நூற்றாண்டின் தமிழி
5. அகரத்தின் அடுத்ததான பரிணாமம்;.
6. தற்போதைய அகரத்தினை அண்டிவிட்ட அ
7. தற்போதைய நவீன அகரத்திற்கு முந்திய அகர தோற்றம்
8. கி.பி 4ஆம் நூற்றாண்டிகத் தோன்றம் பெற்ற வட்டெழுத்தான நவீன அகரம்
அசோகன் பிராமி
பிரகிருதத்தில் எழுதப்பெற்ற அசோகன் பிராமியினை அடியொற்றியே தேவநகரியும் அதனை அடியொற்றிப் பிறந்த வடஇந்திய மொழிகளும் பிறந்ததாகக் பல அறிஞர்கள் கொள்ளுகின்றார்கள். இம்மொழிகளை இந்தோ-ஆரிய மொழிகள் என்ற பெயரினால் அழைக்கத் தலைப்பட்டனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தேறு குடிகளாவர். அவர்கள் மத்தியசியாவிலிருந்தும் குறிபாக றஷ்யா, பாரசீகம், கிழக்கு ஐரோப்பா ஆகிய பிரதேசங்களிலிருந்து குடியேறியோராவர். இதன் காரணமாக பல மொழிகளினைப் பேசும் ஒரு கூட்டமாகவே வந்து ஆக்கிரமிப்புச் செய்திருந்தார்கள். ஆகவே இப்பல மொழி பேசுவோர் இந்தியாவில் ஏற்கனவே வாழ்ந்த சுதேசிகளுடன் கலந்தபோது அந்த சுதேசிகள் பாவித்த மொழியினையொட்டிய ஒரு மொழி பாவனையில் இருப்பின் அவர்களுடன் ஒன்றிணைவதற்கு ஒரு பாலமாக அமையும் என்று கருதியதனால் ஒரு பொது மொழி தோற்றுவிக்கப்பட்டிருக்கலாம். இதனாலேயே அப்போது வடநாட்டில் வாழ்ந்த திராவிடர்கள் பாவித்த பிரகிருதத்தினைத் தங்கள் மொழித் தோற்றத்திற்குப் பாவித்திருக்கலாம். இக்காலத்தே அசோகன் பிராமியானது சிந்துவின் சித்திரவெழுத்திலிருந்து தோன்றிய தமிழியில் இருந்து தனக்கு வேண்டிய வரிவடிவங்களை அமைத்துள்ளது என்றே கொள்ள வேண்டும். அதற்கான காரணங்களைப் பின்வருவனவற்றினைக் கொண்டு அறிய முடியும்
1. தமிழி வரிவடிவம் தோன்றுவதற்கு சிந்துவெளியின் சித்திரவெழுத்துக்கள் ஆதாரமாகவிருந்தது. இது முழுக்க முழுக்க திராவிட வரிவடிவமென ஐயம்திரிபற ஏற்கப்பட்டுவிட்டது.
2. அசோகன் பிராமியிலிருந்து ஏனைய மொழிகளின் வரிவடிவம் தோன்றியதாயின் அதற்கான மூல வரிவடிவம் எங்கிருந்து கிடைக்கப் பெற்றது. சிந்துவெளி நாகரிக முத்திரைகளை விட வேறெந்த முத்திரைகளோ அன்றி சித்திர வரிவடிவங்ளோ கிடைக்காதபோது அசோகன் பிராமியின் மூல வரிவடிவ ஆதாரத்தினை நிறுவுவதற்று எந்தச்சான்றுகளும் இல்லை.
3. சிந்துவின் சித்திரவெழுத்திலிருந்து தமிழியும், தமிழியிலிருந்து அசோகன் பிராமியும் தோன்றியதனை மேலே நோக்கினோம்.
4. ஆரியர்கள் இந்திய சுதேசிகளுடன் கலந்தபோது அங்கு திராவிடர்களே ஏற்கனவே அதிஉச்ச நாகரிகத்தில் வாழ்ந்துள்ளார்கள். ஒரு இடத்தினை ஆக்கிரமிப்போர் அங்குள்ள செல்வம், கலை கலாசாரம் போன்றவற்றினை அபகரிக்கவே முயன்றிருப்பர். இதனைச் செய்ய அவர்களுக்கு அங்கு பாவனையில் இருந்த சுதேச மொழியில் அறிவு தேவைப்பட்டது. ஆகவேதான் ஏற்கவே பாவனையில் இருந்த திராவிடர்கள் பாவித்த பிரகிருதம் அவர்களுக்குக் கைகொடுத்தது. தேவநேயப் பாவாணர் அவர்களது கருத்துப் போல் வடதிரவிடர்கள் பாவித்த வடதிராவிடமாகிய பிரகிருதமே அசோகன் பிராமியின் பிறப்பிற்கும் தேவநகரியின் பிறப்பிற்கும் ஆதாரமாயின.
5. மேலேயுள்ள ஆதாரங்களை நோக்கின் சகல வடமொழிகளின் பிறப்பிற்கு திராவிடமே ஆதாரமாகவிருந்தது என்ற உண்மை இங்கு வெளியே தெரிகின்றது.


அசோகன் பிராமியின் அகரம்

மேலே காணப்படுவதே அசோகன் பிராமியின் அகரம். இதன் தோற்றம் கிமு.3ஆம் நூற்றாண்டாகும். தமிழியின் காலம் கிமு.5ஆம் நூற்றாண்டாகும். ஆகவே தமிழ் பிராமியிலிருந்தே தோற்றத்தின் அடிப்படையிலும் காலத்தின் அடிப்படையிலும் வரிவடிவத்தின் அடிப்படையிலும் தமிழியே அசேகன் பிராமிக்கு முந்தியது மட்டுமல்லாது அது தோன்றுவதற்கும் ஆதாரமாய் அமைந்து அதன் பிரதிமையே அசோகன் பிராமியென உறுதியாகக் கூறமுடியும். ஆகவே அதன் வழிவந்த வட மொழிகள் அத்தனையும் தமிழ் பிராமி வழிவந்ததெனறே கொள்ளவேண்டும். தமிழிக்கு அதன் வரிவடிவத்தினை அமைக்க அதன்பின்புலமாக சிந்துவெளியின் சித்திர எழுத்துக்கள் இருந்துள்ளன. சிந்துவெளி வரிவடிவங்களும் அக்காலத்தே பாவிக்கப்பட்ட மொழி திராவிடம் என்பதும் ஐயம்திரிபற சகல ஆராச்சியாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அசோன் பிராமி எங்கிருந்து தனது மூலவரிவடிவத்தினைப் பெற்றுக் கொண்டது என்பதற்கான விளக்கம் என்ன? சிந்துவெளி நாகரிகத்தினை விட வேறு எங்கிருந்தும் வரிவடிவங்களினை அசோகன்பிராமி பெற்றுக் கொள்ளுவதற்கு வேறு ஏதும் வரிவடிவங்கள் இந்திய துணைக்கண்டத்தில் இருந்ததா என்று நோக்கின் அதற்குரிய விடை அப்படியேதும் இருந்ததில்லையென்பதாகும். ஆகவே இதனையொற்றிப் பிறந்த பிரகிருதமும் அதிலிலிருந்து பிறந்த ஆரிய மொழிகளினதும்; மற்றும் வடஇந்திய மொழிகளின் வரிவடிவத்திற்கும் திராவிடமே மொழிவரிவடித்தினைக் கொடுத்தததென்றே கூறமுடியும்.

அகரவரிசைகளின் ஒப்பீடு
கீழே காணப்படும் அட்டமவணையில் தமிழ் அகர வரிசையில் உள்ள அ வும் ஆ என்ற வரிவடிவத்தினைப் போன்ற சாயலுடனேயே சமஸ்கிருத அ, ஆ ஆகிய இரண்டு எழுத்துக்களும் அமைந்தன. அ விற்கு மேலே சுழியிட்டு பின்பு அதற்குக் கீழே ஒரு வண்டியிட்டு பிற்பகுதியில் ஒரு கோட்டினை இட்டு முடிப்பதே தமிழ் அகரமாகும். இதே எழுத்து முறையினைப் பின்பற்றியே கீழே குறிப்பிட்ட கால வரிசைப்படி தோன்றிய பல இந்திய மொழிகளின் எழுத்து வரிவடிவங்கள் தோற்றம் பெற்றன., திராவிட மொழிகளிலோ அன்றி; ஆரிய மொழிகளிலோ அந்ததந்த மொழிகளின் வரிவடிவங்கள் தமிழ் வரிவடிவத்தின் சாயலை அடியொற்றியே அமைக்கப் பெற்றன.. தெலுங்கும் கன்னடமும் தமிழ் அ வரிவடிவத்தை தலை கீழாக போட்டு எழுதியிருப்பதனை அவதானிக்க முடியும்;. அதிலும் ஒரு வட்டம், ஒரு வண்டி மற்றும் ஒரு கோட்டுடனேயே அகரம் அமைக்கப்பட்டுள்ளது. கீழே காணப்படும் பட்டியலின் வரிவடிவங்களை நோக்கின் உயிர் எழுத்துக்களின்; தொடர்பு பற்றி ஒரு முடிவிற்கு வர முடியும்.
கீழே காணப்படும் அட்டவணையில் மொழிகளின் அகரவரிசை வரிவடிவங்களும் அவை தோன்றிய காலவரிசையின் அடிப்படையிலும் எழுத்து வரிவடிவங்களின் ஒப்பீட்டடிப்படையிலும் தரப்பட்டுள்ளன. இவ்வட்டவணையிலிருந்து சிந்து சித்தரவெழுத்திலிருந்து தமிழியும் தமிழியிலிருந்து தற்கால தமிழ் அகரவரிசையும் தமிழியைப் பின்பற்றி ஏனைய எழுத்துக்களின் வரிவடிவங்களும் எவ்வாறாகத் தோன்றியதென்பதை ஐயம்தெளிவுற அறிந்துகொள்ள முடிகின்றது. அகரவரிசையின் ஏனைய எழுத்துகளாக இ, ஈ, உ, ஊ, எ, ஏ, உ, ஊ, ஐ, ஒ ஆகிய எழுத்துக்ளை பட்டியலில் காட்டப்பட்ட ஏனைய எழுத்துக்களுடன் நோக்கின் தமிழ் எழுத்துக்களுக்கும் மற்ற மொழிகளின் அதே எழுத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அறிந்து கொள்ள முடியும்.
சிந்துவின் சித்திரவரிவடிவம் - தமிழி – அசோகன் பிராமி – ஏனைய மொழிவடிவங்களின் ஒப்பீடு

தமிழின் தொன்மையும் அதன் நீண்ட வரலாறும், சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகளும்; தென்னாட்டில் கிடைக்கப்பெற்ற குகைக் கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்ட மட்பாணடங்களில் காணப்படும்; வரிவடிவங்களும், தொல்காப்பியத்தின் தொன்மையான வரலாறும் ஏனைய மொழிவரிவடிவங்களில் எவ்வாறான தாக்கத்தினையும்; செல்வாக்கினையும் செலுத்தியது என்பதனை அறிய முடியும்.
• மேலேயுள்ள அட்டவனையில் காணப்படும் தமிழின் எழுத்துக்கள் கி.பி 2ம் நூற்றாண்டிலிருந்து படிப்படியாக வட்டெழுத்தாக மாற்றம் பெறுகின்றன.
• வடமொழி தமிழியின்; வடிவத்தினின்றும் தனது சொந்த வரிவடிவத்திலிருந்து மாற்றம் பெற்று வட்டெழுத்தாக கிரந்தம் என்ற பெயருடன் கிபி500 ஆண்டளவில் தென்நாடடிற்கு அறிமுகமாயிற்று. இக்காலத்தேதான் பல்லவப் பேரரசர்கள் ஆரியச் செலவாக்கினைத் தென்நாட்டில் வேரூன்றச் செய்யும் நோக்கோடு தமிழோடு இணைந்த ஒரு வரிவடிவத்தினை கிரந்தமாகத் தோற்றுவித்து தென்நாட்டில் புகுத்தினார்கள். முதன் முதலில் கிரந்தமே தமிழ் வரிவடிவத்தினையொற்றிப் பிறந்த மொழியாகும். தேவநகரி எழுத்துகள் நேர் கோட்டு வரிகளைக் கொண்ட எழுத்து வடிவத்தால் அமைந்தது. ஆனால் அதன் அ மற்றும் ஆவன்னாவிலும் தமிழ் அ, ஆ வன்னாவின் வட்டெழுத்துச் சாயல் காணப்படுகின்றது அதனை ஆரியர்களால் மறைக்க முடியவில்லை..
• சிந்துவெளியில் வாழ்ந்த திரவிடர்களே இந்தியாவின் ஆதிக் குடிகளாகளாவும் சிறப்புடன் கட்டிடக்கலை, சிற்பக்கலை, உலோக பயன்பாட்டுக்கலை, நகர நிர்மாணம், மண்பாண்ட பாவனையில் தங்கள் மொழியினைப் பதிவு செய்யும் கலை போன்றவற்றை அங்கு வாழ்ந்தவர்களே இந்திய நாட்டிற்கு அறிமுகம் செய்தார்கள்;. அவர்கள் எழுதி வைத்த சித்திர எழுத்து வடிவங்களே இந்தியாவின் முதல் எழுத்து வடிவங்களாகும்;. இதற்கு முன்பு இந்தியாவில் எந்தவிதமான சித்திரவரிவடிவங்களோ அல்லது எழுத்து வடிவங்களோ இருந்ததேயில்லை. அதற்கான ஆதாரங்கள் எதுவுமேயில்லை. இந்த சித்திர வடிவங்களே முதலில் இந்திய துணைக்கண்ட மனிதன் பேசும் மொழியின் கருத்தினை எழுத்தில் வடிக்க படைக்கப்பெற்ற வரிவடிவமாகும். இதிலிருந்து பிறந்த தமிழிலில் இருந்தே ஏனைய மொழிகளும் அடியொற்றி பின்பற்றியிருக்க முடியுமேயல்லாமல் வேறு எக்காரணிகளும்; அந்தந்த மொழிகளின் வரிவடிவம் தோன்றக் காரணமாவிருக்க முடியுhது.
• தமிழில் முதல் தோன்றிய இலக்கண நூல், தொல்காப்பியமாகும். இதன் காலம் கிமு 300 என்று பல அறிஞர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழில் தொல்காப்பியம் எழுதப்பட முன்னர் ஒரு சில இலக்கிய வடிவங்கள் இருந்திருக்க வேண்டும் என சிந்திக்கும் எவருக்கும் உதிக்கும் ஒரு உண்மையாகும்;. காரணம் அதில் படைக்கப் பெற்ற எழுத்ததிகாரம்;, சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்பனவற்றிக்கான இலக்கணவடிவம் ஏற்கனவே எழுதப்பட்டிருந்த ஒரு இலக்கிய வடிவத்திற்கோ அன்றி ஒரு திருந்திய மொழிக்கோ எழுதப்பட்டிருக்க வேண்டும் அல்லாது விட்டால் வெறும் வெறுமையிலிருந்து ஒரு மொழியின் இலக்கணத்தைப் படைக்க முடியாது. ஆகவே தமிழ் எழுத்து வரிவடிவம் கி.மு விற்கு முற்பட்ட கி.மு 500 ஆகக் கருதப்பட முடியும்.
• திராவிட மொழிகளான தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளுக்களுக்கோ அன்றி சிங்களத்திற்கோ எந்தவொரு தெலுங்கு பிராமியோ அன்றி கன்னட பிராமியோ அல்லது சிங்கள பிராமியோ இதுவரை ஆந்திராவிலோ அல்லது கன்னடத்திலோ அல்லது இலங்கையிலோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆகவே அதற்கான வரிவடிவம் நேரடியாகத் தமிழில் இருந்தும் அம்மொழிகளின் சில அம்சங்கள் பிரகிருதத்திலிருந்தும் பெறப்பட்டுள்ளன. இந்த இரண்டு வரிவடிவங்களுக்கும்; மேலே அட்டவணையிலுள்ள ஏனைய திராவிட மற்றும் ஆரிய மொழிகளெனக் கூறப்படும் மொழிகளுக்கும் வரிவடிவத்தில் வேறுபாடுகள் தெரிந்தாலும் அ எழுத்தையும் ஆ வன்னா எழுத்தையும் தொடர்ந்து ஏனைய எழுத்துக்களையும் நோக்கும் போது சகல மொழிகளின் அ, ஆ எழுத்து இரண்டும் தமிழுக்கேயுரியதான ஒரு வட்டம் ஒரு வண்டி ஒரு கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது.
• ஆரிய மொழிகள் என்று கூறப்படுகின்ற ஒரியா, சிங்களம், குஜராத்தி ஆகிய மொழிகளுக்கும் அ, ஆ அகிய இரண்டு எழுத்துக்கள் ; தமிழுக்கென விசேடமாக அமைந்த ஒரு வட்டம் ஒரு வண்டி ஒரு கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது. ஏனைய உயிர் மெய் எழுத்துக்கும் தமிழ் வரிவடிவத்தினையொற்றியே எழுதுப்பட்டு இருப்பதனைக் காணமுடியும். இந்த மொழிகள் ஆரிய மாயைக்கு உட்பட்டே ஆரிய மொழிகளாக தங்களை ஆக்கிக் கொண்டன. அதனை தங்கள் மேன்மையென்றும் கருதிக் கொண்டனர். அண்மைய ஆராச்சிகள் ஒரிய மொழியும் திராவிடம் என்ற முடிவிற்கு ஒரு சில அறிஞாகள் வந்துள்ளனர்.
• சேர் கியேசன் என்னும் அறிஞர் கூறும் போது தமிழ் மிகவும் அனாதியானது மிக நேர்த்தியாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு மொழியாகும். தமிழ் ஆரம்ப காலத்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை உள்ளடக்கிய மொழியாகவேயிருந்தது. பின்பு கி.பி 10ம் நூற்றாண்டில் தெலுங்கும், கிபி. 850ஆம் ஆண்டுகளில் கன்னடமும், கி.பி. 1400ல் மலையாளமும் தனித் தனி மொழிகளாயின. ஆதாரம்: Concise History of Ceylon. P40
• கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஒரு மொழியே இருந்துள்ளது. அதுபற்றி இன்னொரிடத்தில் கிரியேசன் குறிப்பிடும்போது இலங்கையில் தமிழோ அன்றி அதனையொட்டிய ஒரு மொழியோ வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தேயிருந்திருக்க வேண்டும். ஆதாரம் Concise History of Ceylon. P42 பௌத்த சமயம் இலங்கையில் பரவியதனைத் தொடர்ந்தும் விஜயனின் வருகையோடும் அதனைத் தொடர்ந்துமே ஆரியச் செல்வாக்கு இலங்கையில் பரவியது.
முடிவுரை
மேலே கூறப்பட்ட தமிழின் வரலாறும் அதன் தொன்மையும் அதன் மொழிச் செழிப்பும் சிந்துவெளியிலிருந்து வளர்ந்த மொழிவரிவடிவ பரிணாம வளர்ச்சியும் ஆரிய ஆக்கிரமிப்பின் போதுகூட தனது தனித்தன்மையுடன் வளர்ந்து அதன் வரிவடிவத்தனை ஏனைய மொழிகளுக்கும் கொடுத்து அந்தந்த மொழிகளும் வளர வழிசமைத்ததென்றே கூறமுடியம்.
உசாத்துணை நூல்கள்:
1 கு. அரசநாதனின் தமிழ்க்கப்பல் நூலில் என்ற நூலின் முகவுரையில் பி.இராமநாதன்,)
2. விக்கிப்பீடியா தேடுதளம் -
3. கு.அரசேந்திரனின் தமிழ்க்கப்பல்.
4. மொழி வரலாறு தெ.பொ.மீ களஞ்சியம் 1
5. Concise History of Ceylon 19616. என் மொழியின் கதை – ச.வீ.துருவசங்கரி canada

Sunday, July 25, 2010

ஆந்திர நாட்டுச் சிற்பக்கலையும் சங்க இலக்கியப் புறப்பொருளும்

ஆந்திர நாட்டுச் சிற்பக்கலையும் சங்க இலக்கியப் புறப்பொருளும்

முனைவர் அ. பரிமளகாந்தம்,
இணைப்பேராசிரியர்,
அகராதியியல்,
பி.எஸ்.தெலுங்குப் பல்கலைக்கழகம்,
ஐதராபாத் – 500 004.



முன்னுரை:

பழமையும், தொன்மையும் வாய்ந்த இந்தியா பல்வேறு மொழிகளுக்கும், பல்வேறு கலாச்சாரங்களுக்கும் மட்டுமேயல்லாமல் பலவேறு கலைகளுக்கும் இருப்பிடமாகத் திகழ்கின்றது. ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்பார் ஆன்றோர். அந்த அறுபத்து நான்கு கலைகளில் சிற்பக்கலையும் ஒன்று.

கற்கால மனிதர்களுக்கு1 சிற்பக் கலை பற்றிய ஞானம் உண்டு என்ற குறிப்பினைத் தந்த பி.நாகேஸ்வரராவ் என்பார் சிற்பக் கலைகளின் பங்கு ஒரு நாட்டோடு எங்ஙனம் பின்னிப் பிணைந்திருக்கின்றது என்பதைப் பின் வருமாறு குறிப்பிடுகின்றார். ஒரு நாட்டின் தேசீயக் கொடி, தேசீயக் குறியீடு, அந்நாட்டு மன்னவனின் இராஜமுத்திரை, மணி மகுடம், சிம்மாசனம், அந்நாட்டு மக்களின் ஆடை அணியும் முறை, நாணயம், நாட்டு மக்களின் தனித்தன்மை, வாழுமிடம், தட்பவெட்ப நிலை, சாலை, கட்டிடங்கள், அணைக்கட்டுகள் போன்ற எல்லாமே அந்நாட்டின் சிற்பங்கள்தாம் என்கிறார். (பி.நாகேஸ்வரராவ், 2000).


தமிழ் இலக்கியங்களின் பாடு பொருள்களாக அகம், புறம் என்ற இரண்டும் விளங்குகின்றன. தலைவன், தலைவியினுடைய காதல் வாழ்க்கையைக் குறிப்பது அகம் என்றும், தலைவனின் புகழ், வீரம், கொடை போன்ற புறச் செய்திகளைக் குறிப்பது புறம் என்றும் பாகுபாடு செய்கின்றன.

நோக்கம்:

ஆந்திர நாட்டுச் சிற்பக் கலைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டு, அச்சிற்பக்கலையைத் தமிழ்ச் சங்க இலக்கியங்களின் பாடு பொருள்களுள் ஒன்றான புறப் பொருளோடு பொருத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இக் கட்டுரையில் வரலாற்றுக்குட்ட காலத்தில் தோன்றிய சிற்பக் கலைகள் மட்டுமே ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. சோமேஸ்வரரா (1975), நாகேஸ்வரராவ் (2000) ஆகிய இருவரும் ஆந்திர நாட்டின் சிற்பக் கலை வளர்ச்சியை வரலாற்று முறையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.. ஆந்திர நாட்டுச் சிற்பக் கலை சாதவாகன மன்னர்களின் காலத்திலிருந்து (அதாவது கி.பி. 100) தொடங்கி இப்போதைய நவீன காலம் வரை அதாவது 1947 வரை வளர்ந் திருக்கிறது என்று குறிப்பிடுகின்றார்கள்.


ஆந்திர தேசத்தை ஆண்ட மன்னர்கள் சாதவாகனர்கள், இக்க்ஷவாகுலு, சாலங்காயனலு, விஷ்ணுகுண்டிலு, பல்லவர்கள், பாதாமி சாளுக்கியர்கள், கிழக்குச் சாளுக்கியர்கள், இராஷ்டிரகூடர்கள், கிழக்குக் காங்குலு, காகத்தியர்கள், ரெட்டி ராஜாக்கள், விஜயநகர மன்னர்கள் முதலியோர் ஆவர். இவர்களாலும் ஜைன மதப் பிரசாரம் செய்பவர்களாலும் நிர்மாணிக்கப்பட்ட சிற்பங்கள் பெரும்பாலும் மதத்தைத் தழுவியதாகவே இருக்கிறது. இச் சிற்பங்கள் புராண இதிகாச சாம்பிரதாய முறையில் வாஸ்து சிற்பங்களாகவும், பிரதிமா சிற்பங்களாகவும் இருக்கின்றன. இவை ஞானமார்க்கத்தையும், தர்ம மார்க்கத்தையும், பக்தி மார்க்கத்தையும் போதிக்கும் விதமாக அமைந்திருக் கின்றன. மன்னர்களும் மக்களும் புருஷார்த்தமான, தர்மம், அர்த்தம், காமம், மோட்சங்களை அடைவதே நோக்கமாகக் கொண்ட சிற்பங்களை உருவாக்கி இருப்பதால் இது ஒரு சிறப்பான கலையாக மதிக்கப்படுகிறது.

ஆந்திரதேசத்தில் உள்ள சிற்பங்களை மன்னர்கள் தாங்கள் பின்பற்றிய மதத்தைப் பற்றியதாகவும், சில மன்னர்கள் போர் புரிந்து வெற்றிவாகை சூடி அந்த மகிழ்ச்சியை கோவில் கட்டி அதில் சிற்பங்களை அமைத்தாகவும், சிற்சில சமயங்களில் இராணிகளின் விருப்பங்களுக்காகக் அமைக்கப்பட்ட சிற்பங்களாகவும் இருக்கின்றன. இச் சிற்பங்கள் பெரும்பாலும் காந்தாரம், மதுர, அமராவதி சிற்ப சம்பிரதாய முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இச் சிற்பங்கள் மத சம்பந்தமான விஷயங்களைக் கூறுபவையாகவும் இருக்கின்றன. தமிழ் இலக்கியங்களின் பாடு பொருள்களில் ஒன்றான புறப் பொருளை ஒப்புமைப்படுத்தும் விதமாக அமைந்த சிற்பங்கள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன.

சாதவாகன மன்னர்களின் காலம் கி.மு.235 – கி.பி.202. இம்மன்னர்கள் பெளத்த மதத்தைத் தழுவியவர்கள். பாஜாக் குகைகளில் காணப்படும் சிற்பக் காட்சிகளில் ஒன்று, நான்கு குதிரைகள் பூட்டிய இரதத்தில், தன் மனைவியுடன் உலா வரும் மன்னவன் அரக்கனுடன் சண்டையிட்டு அவனை விரட்டியடிக்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பக் காட்சி, தமிழ் இலக்கியப் புறப்பொருள்களுள் ஒன்றான தலைவனின் வீரத்திற்கு ஒப்பிடும் படியாக அமைந்துள்ளது. மேலும், அமராவதியில் காணப்படும் சிற்பக் காட்சிகளில் ஒன்று சாதவாகன் மன்னன் ஒருவன், மக்களின் நலனுக்காக கனகாபிஷேகம் செய்வதாக அமைக்கப்பட்டுள்ளது. அச்சிற்பக் காட்சி சங்க இலக்கிய புறப்பொருள் கூறுகளில் ஒன்றான கொடைக்கு ஒப்பிடுவதாக அமைந்துள்ளது. மற்றும் அமராவதி ஸ்தூப பிரகாரத்தில் செதுக்கப்பட்டுள்ள சிற்பத்துடன் கூடிய வளைய உருவ முத்திரைகள் தமிழ் இலக்கியம் கூறும் புறப்பொருள்களோடு ஒப்பிடும் படியாக அமைக்கப்பட்டுள்ளன. சாதவாக மன்னர்களின் சிற்பங்கள் மத சகிப்புத்தன்மைக்கும் மக்கள் ஆதரவிற்கும் எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

சாதவாகனர்களின் பழங்கால சிற்ப கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது சாஞ்சி ஸ்தூபி தோரணம். இதில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் பௌத்த யுகத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையையும், புத்தரின் வாழ்க்கை வரலாற்றோடு, புத்த பெருமான் எல்லாவற்றையும் துறந்து காட்டிற்குப் போவது போன்ற புத்ததேவனின் வாழ்க்கைக் கட்ட நிகழ்ச்சிகளும், சில கொடை வள்ளல்களின் சிலைகளும் சிற்பமாகக் காணப்படுகின்றன. அதே தோரணத்தில் பௌத்த ஜாதகக் கதைகளும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இச் சிலைகள் அம்மன்னர்கள் பின்பற்றிய மதத்தையும் அம்மதத்திற்கு அம்மன்னர்கள் அளித்த சிறப்பையும் அவர்கள் கொடையாக அளித்த நிதி உதவியையும் தமிழில் கூறப்படும் தலைவனின் புகழ், கொடை என்ற புறப்பொருள்களுக்கு ஒப்புமையாகக் கூறலாம். பிற்காலத்தில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் போன்ற அரசர்கள் கோயில் சிற்பங்களுடன் தங்கள் சிற்பங்களையும் தங்கள் இராணிமார்கள், இராஜகுமாரர்கள், சாமந்தர்கள் முதலியோரின் சிற்பங்களையும் செதுக்கி யுள்ளனர். இவர்களையும் கொடை வள்ளல்கள் என்றே குறிப்பிடு கிறார் சோமேஸ்வரராவ் (1975).

பெரும்பாலும் ஆந்திராவை ஆண்ட அரசர்களின் காலத்தில் பௌத்த, ஜைன மதங்கள் செல்வாக்குப் பெற்ற காரணத்தினால் பௌத்த ஜைன சிற்பங்கள் ஏராளாமாகக் காணப்படுகின்றன இருப்பினும் இந்து மதத்தைத் தழுவி, கோயில்கள் சிற்பங்கள் அமைத்த அரச வம்சங்களும் இருக்கின்றன. அவற்றுள் விஷ்ணு குண்டிலு வம்சத்தவர்களின் சிற்பங்களாக மொகல் ராஜபுரக் குகையில் கம்பங்களில் செதுக்கப்பட்ட கிருஷ்ணன் கோவர்த்தனகிரியைத் தூக்குதல், பூதேவியை வராகவதாரம் எடுத்துச் சமுத்திரத்திலிருந்து கிருஷ்ணன் கொண்டு வருவது, நரசிம்மன் இரணியகஸ்யபுவை வதம் செய்வது, த்ரேவிக்ரமன் பலியைக் கொல்லுதல், ஜ்வால கம்ப ரூபத்தில் லிங்கோத்வம், பிரம்ம, விஷ்ணு விப்ராந்தி செய்யும் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை விஷ்ணுகுண்டிலு வம்ச அரசர்களின் இந்து மதப் பற்றையும் அம்மதத்திற்கு அவர்கள் செய்த கொடையையும் வெளிப்படுத்துவது தமிழ் இலக்கியப் புறப் பொருளான கொடைக்கு ஒப்பாகக் கருத வாய்ப்பளிக்கின்றன.

விஷ்ணு குண்டிலு வம்ச அரசர்களைப் போலவே காகத்தீய அரச வம்சத்தவர்களும் இந்துக் கோயில்கள் பலவற்றைக் கட்டியுள்ளனர். இத்துடன் ஜீர்ணாலயமும் காணப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன.. ஆயினும் அழிவில் பிரதாபருத்திரனின தலை, யானைகள், குதிரைகள், அன்னங்கள் கஜசிங்க சிற்பங்களின் வரிசைகள் இன்னும் எத்தனையோ அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன, இச்சிற்பங்களில் காணப்படும் யானைகள், சிங்கங்கள் குதிரைகள் போன்றவை தமிழ் இலக்கியம் கூறும் புறப்பொருள்களுள் ஒன்றான போருக்குச் சான்றாக அமைகின்றன.

தமிழ் இலக்கியங்களில் புறப் பொருள் கூறுகளாக பகை வேந்தனின் புறத்திடத்திற்குச் சென்று சூழ்ந்து தங்குதல், தாக்கிய பின்னர் சூழப்பட்ட ஊரை அழித்தல், பகைவர்களுடன் போரிட்டு வென்று மீளுதல், கவர்ந்து கொண்ட பசுக்கூட்டங்களை வருத்தாது மெதுவாக ஓட்டி வருதல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதே போன்று அப்படியே அமையாவிடினும், பகை கொண்ட அரசனுடன் போரிட்டு, அங்குள்ள பொருட்களையும், ஆட்களையும் கொண்டு வருதல் போன்ற நிகழ்ச்சிகள் ஆந்திர சிற்பக் கலையில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. சான்றாக பகையரசனை வென்று பாதாமி விக்கிரமாதித்தியன் தன் வெற்றிக்குச் சின்னமாக கங்கா, யமுனா துவார பந்தத்தை கொண்டு வருகிறான். கீழைச் சாளுக்கிய மன்னனான குணக விஜயாதித்தன் இராஷ்டிரகூட மன்னனான இரண்டாம் கிருஷ்ணன் என்பவனைப் போரில் வென்று மேலே சொன்ன துவார பந்தத்தை பிக்கவோலு என்று இடத்திற்குக் கொண்டு வந்து கீழைச் சாளுக்கிய தேவாலய நிர்மாணத்தில் பயன்படுத்தி இருக்கிறான் என்றும் சோமேஸ்வரராவ் குறிப்பு சொல்கிறது.

சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தன் காஞ்சியை வெற்றி பெறுகின்றான். அங்குள்ள இராஜசிமஹேஸ்வர அல்லது கைலாச நாதர் தேவலாயம் அமைக்கப்பட்டிருக்கும் அமைப்பைப் பார்த்து, அதன்மேல் ஆசைப்பட்டு, அதனால் தூண்டப்பட்டு காஞ்சி சிற்பிகளைத் தன் தேசத்திற்கு வரவழைத்து தேவாலயம் எழுப்பினான் என்று கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் தலைவனின் வீரம் என்னும் புறப்பொருளுக்குச் சான்றாக எண்ணப்படும் விதமாக உள்ளது. வெற்றி பெற்ற நாட்டிலிருந்து பொருட்களைக் கவர்ந்து வராமல் ஆட்களை/சிற்பிகளைக் கொண்டுவந்து கோயில் பணியில் ஈடுபடுத்தி கோயில்களைக் கட்டுவது.

இரண்டாவது விஜயாதித்தன் என்ற பெயரில் புகழ் பெற்ற நரேந்திர மிருகராஜா பனிரெண்டாண்டுகளில் 108 போர் செய்து வெற்றி பெற்று, சின்னங்களாக 108 தேவாலாயங்களை கட்டியிருக்கிறான் என்று தன் மன சில்ப சம்பத (1975) என்ற புத்தகத்தில் டி. சோமேஸ்வரராவ் குறிப்பிடுகிறார்.

இராஷ்டிரக் கூடர்களின் ஜைன சிற்பங்களில் தர்மத்திற்கு சங்கேதமாக வைரம், மான் சிங்காசன சிங்கங்கள், தர்ம சக்கர ஸ்தம்பங்கள், மூன்று இரத்தினங்களை உடைய ஸ்தூபங்கள் உள்ளன. இவற்றில் சில பௌத்த தர்மத்திற்கு சங்கேதங்கள். இது இராஷ்டிரகூடர்களின் மதப் பற்றையும் அவர்கள் அம் மதத்திற்குக் கொடுத்த கொடையையும் விளக்குவதாக அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியப் புறப் பொருளுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

இந்து மத தேவதையின் விக்கிரகங்கள், இந்திரன், சரஸ்வதி, கணபதி, குமாரசுவாமி, ஈஸ்வரன், சாமுண்டி, காளி, கஜலட்சமி, குபேரன் போன்ற சிற்பங்களைத் தங்கள் தேவாலாயங்களில் ஆந்திர நாட்டுச் சிற்பிகள் செதுக்கியுள்ளனர். இது தமிழ் இலக்கியப் புறப் பொருளில் கூறப்பட்டுள்ள கடவுள் வாழ்த்து என்னும் புறப்பொருளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது

விஜயநகர சிற்பத்தில் போருக்குரிய சின்னங்களான ஆயதம் தாங்கிய போர் வீரர்கள், குதிரை வீரர்களின் பொம்மைகள், யானைகளின் வரிசை போன்ற தமிழ் இலக்கியப் புறப் பொருளுக்குரிய அம்சங்கள் காணப்படுகின்றன.

முடிவுரை:

இவ்வாறு சாதவாகனர்கள் காலத்திலிருந்து இன்றைய நவீன யுகம் வரை ஆந்திர நாட்டுச் சிற்பக் கலைகளில் ஆந்திராவை ஆண்ட அரசர்களின் வீரத்திற்கும், கொடைக்கும், புகழுக்கும் சான்றாக விளங்கும் சிற்பங்கள் எத்தனையோ குவிந்து கிடக்கின்றன. இவை தமிழ் இலக்கியம் கூறும் புறப்பொருள்களுடன் பொருந்தி அதற்குப் பொருத்தமாக இருப்பது வியக்கத்தக்கவையேயாகும். தமிழ் இலக்கியங்கள் பாடு பொருளாகப் புறப்பொருள் என்று ஒரு பகுப்புச் செய்து அதை ஒரு இலக்கிய உத்தியாகப் பயன்படுத்தி இலக்கியங்களில் கையாளப்ப்பட்டிருக்கிறது. ஆனால் தெலுங்கில் இதை இந்தப் பகுப்பு என்று பகுத்துச் சொல்லாமல் செயல்படுத்தி இருக்கிறார்கள். ஆகையால் மொழி வேறாக இருந்தாலும், கலாச்சாரங்களில் சிற்சில வேற்றுமைகள் இருந்தாலும், ஒற்றுமைகளும் இருக்கின்றன என்பதை மேற்கூறிய சிற்பக் கலையில் காணப்படும் புறப்பொருள் கூறுகளிலிருந்து புரிகிறது.

அடிக்குறிப்புக்கள்:

1. கற்கள் என்பது தெலுங்கில் சிலைகளைக் குறிக்கப் பயன்படுகின்றது. தமிழில் பழைய கற்காலம், புதி. கற்காலம் என்று குறிக்கப்படுவது தெலுங்கில் பாத்த சிலல யுகம், கொத்த சிலல யுகம் என்று குறிப்புடுகின்றார்கள். (பி.நாகேஸ்வரராவ், 2000)
துணை நூல்கள்:

1. கேசிகன் புலியூர்,1981. தொல்காப்பியம் தெளிவுரையுடன், பாரி நிலையம், சென்னை – 500108.

2..சோமேஸ்வரராவ், டி. 1975. மன சில்பகளா சம்பத, ஆந்திரபிரதேஷ் லலிதகளா அகடமி, ஹைதராபாத் – 500 004.

3. நாகேஸ்வரராவ், பேதபாடி.2000 சில்பாகமசெந்த்ர சாந்த்ர, சாயி பிரஸ், ஹைதராபாத் – 29.

4. Sarasvathi, S. 2009. Dance as depicted in kakatiyan sculpture and literature, Venu printers, Hyderabad.

Sunday, July 18, 2010

தொல்காப்பியரின் 'வினாவும் செப்பும்': கருத்தாடல் நோக்கு

தொல்காப்பியரின் 'வினாவும் செப்பும்': கருத்தாடல் நோக்கு

Dr. P.DAVID PRABHAKAR
ASSOCIATE PROFESSOR OF TAMIL
MADRAS CHRISTIAN COLLEGE, CHENNAI-600059
tamilprofessor@gmail.com


0.0 இக்கட்டுரை, தொல்காப்பியரின் செப்பு – வினா சார்ந்த விவாதங்களை முன்வைப்பதன் வழி, சொற்றொடர் அமைப்புக்கு மேம்பட்ட மொழி அலகுகளைத் தொல்காப்பியர் கவனத்தில் கொண்டிருப்பதை எடுத்துக் காட்டுவதோடு, அவை கருத்தாடல் நோக்கில் அணுகப்பட வேண்டியதன் இன்றியமையாமையைச் சுட்டிச் செல்கிறது.

0.1 தொல்காப்பியர் சொற்களின் இயல்பையும் சொற்களுக்கிடையே அமையும் உறவையும் விவரிப்பதோடு, சொற்றொடர் அமைப்பில் அவை வழுவின்றி இணக்கமாக அமையவேண்டிய முறைமையினையும் குறிப்பிடுகிறார். கிளவியாக்கத்தில் இடம் பெறும் நூற்பாக்கள் பலவற்றில் 'மயங்கல் கூடா', 'வரையார்' என இடம் பெற்றிருப்பது, வழுகாத்தலை நோக்கமாகக் கொண்டு கிளவியாக்கம் அமைந்திருப்பதை உணர்த்துகிறது. வழாநிலையும் வழுவமைதியும் திணை, பால், இடம், காலம், மரபு, வினா, விடை என ஏழு பிரிவுகளாகப் பகுத்துக் கூறப்படுகின்றன. தொடரின்கண் ஏழு வகையான பிழைகள் ஏற்படலாம் எனப் பால் ராபர்ட்ஸ் குறிப்பிடுவதை இவை பெரிதும் ஒத்திருக்கின்றன என சூ.இன்னாசி (1985: 133) குறிப்பிடுகிறார்.

சொற்றொடர் அமைப்பில் திணை, பால், இடம், காலம், மரபு, வினா, விடை ஆகியவற்றைச் சார்ந்து அமையும் வழு, வழுவமைதிகளைத் தொல்காப்பியரை அடியொற்றி உரையாசிரியர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர். திணை, பால், இடம், காலம் ஆகியன சார்ந்து அமையும் வழுக்கள், சொற்றொடர் அமைப்பு சார்ந்த மொழி அறிவை அடிப்படையாகக் கொண்டவை. மரபு வழு பொருத்தமான சொல்லை ஆளும் சமூக மொழிப் பயன்பாடு சார்ந்தது. இதனை மொழியின் சொல்தொகுதி சார்ந்து விளக்கிட இயலும். ஆயினும், வினா-செப்பு குறித்த வழுக்கள் சொற்றொடர் அமைப்பு கடந்ததாகவும், சிலவிடங்களில் தர்க்கம் சார்ந்ததாகவும், அதனையும் கடந்து உரையாடல் நிகழும் சமூகப் பண்பாட்டு பின்னணியில் விளக்கம் பெற வேண்டியனவாகவும் உள்ளன. அதாவது, கருத்துப்பரிமாற்றத்தின் அங்கங்களாக அமையும் சூழல், நபர், இலக்கு, உரைச் செயல், மனப்பாங்கு, உத்திகள், நியதிகள் போன்றவற்றின் பின்புலத்தில் இவற்றை விளக்க வேண்டியுள்ளது. சற்று விரிந்த தளத்தில், பேச்சு குறித்த இனவரைவியல் (Ethnography of Speech) நோக்கிலும் ஆராய இவை இடம் கொடுக்கின்றன.

தொல்காப்பியக் கிளவியாக்கத்தின் நான்கு நூற்பாக்கள் (13-16) செப்பு வினா பற்றிப் பேசுகின்றன. வினாவும் செப்பும் அடுத்தடுத்து அமையும்பொழுது, அவற்றுக்கிடையே நிலவும் உறவு சொற்றொடர் எல்லையைக் கடந்ததாக உள்ளதால் அவற்றைக் கருத்தாடல் (Discourse) நிலையிலேயே விளக்க இயலும். கருத்தாடலின் குறைவாக்கமே (Reduction Process) பனுவலாக (Text) அமைகிறது. ஒருபனுவலில் வினாவும் செப்பும் அடுத்தடுத்து அமையும் நிலையில்,அவற்றுக்கிடையே நிலவும் தொடரிணைவு (Cohesion) கருத்திணைவு (Coherence) ஆகியவற்றை விளக்க வேண்டியுள்ளது. கருத்திணைவு அடுத்தடுத்து அமையும் உரைகளுக் கிடையேயும் (Local Coherence) ஒட்டுமொத்த உரைகளுக்கிடையே பரந்தும் (Global Coherence) அமைவதுண்டு. வினாவும் செப்பும் அடுத்தடுத்து அமைந்து கருத்திணைவை வெளிப்படுத்துவன.

1.0 செப்பு வினா வரையறை

'செப்பு என்பது வினாய பொருளை அறிவுறுப்பது' எனச் செப்பையும், 'வினாவானது அறியலுறவை வெளிப்படுத்துவது' என வினாவையும் சேனாவரையர் வரையறுக்கிறார். வினா இன்றியும் செப்பு அமையும் என்பதால், 'வினாயப் பொருளை அறிவுறுப்பது என்ற வரையறை செப்பிற்கு எவ்வாறு பொருந்துகிறது' என்பதற்கு இரண்டு காரணங்களைச் சேனாவரையர் கூறுகிறார்.


வினாவாவது அறிவுறுத்த வருவது. இவ்விலக்கணத்தையே செப்பிற்கும்
கூறின் அது பொருந்தாது.
செப்பு என்ற தமிழ்ச் சொல் 'உத்தரம்' எனும் வட சொல்லுக்கு
இணையானது. வினாயப் பொருளுக்கு விடை தருவதே 'உத்தரம்' எனுன்பார்
வட நூலார். எனவே தமிழ்ச் சொல்லுக்கும் அவ்வாறே பொருள் காண
வேண்டும்.

2.0 செப்பு வினா வழுக்களும், வழுவமைதிகளும்

'வினா வழுவானது வினவிய சொல்லால் பயனின்றி நிற்பது' என்பார் தெய்வச்சிலையார். 'வினா வழுஉ, தான் வினாவுகின்றதனைக் கேட்டான் இறுத்தற்கிடம் படாமல் வினாதல் என ஒன்றேயாம்' எனக் கல்லாடர் வினா வழுவை வரையறுப்பார்.
'கறக்கின்ற எருமை பாலோ சினையோ'
'ஒரு பொருள் சுட்டி இது நெடிதோ குறிதோ'
ஆகிய எடுத்துக்காட்டுகளைச் சேனாவரையர் தருகிறார்.செப்பே வழுவி வரினும் நீக்கப்படாது என்பதை,

'செப்பே வழீ இயனும் வரைநிலையின்றே
அப்பொருள் புணர்ந்த கிளவியான' (தொல். சொல். ௧௫)

எனும் நூற்பாவில் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். ஆயினும், வினா வழுவுதலைப் பற்றி இங்கு குறிப்பிடாததால், வினா வழுதல் இல்லை என்றும், அதனால் அது வழுவி வருதலை வழுவமைதியாகக் கொள்வ தற்கில்லை என்றும் இளம்பூரணர் குறிப்பிடுகிறார். தொல்காப்பியர் செப்பிற்குக் கூறியதைப்போல் வினாவிற்கு வெளிப்படையாகக் கூறவில்லை யாயினும், பின்வரும் நூற்பாக்களில் வினா வழுவமைதிகளைக் குறிப்பிடப்படுவதைச் சேனாவரையர் எடுத்துக்காட்டியுள்ளார்.

அவற்றுள் யாது என வரூஉம் வினாவின் கிளவி
அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத்
தெரிந்த கிளவி யாகலும் உரித்தே (தொல். சொல். ௩௧)


வன்புற வரூஉம் வினா விடை வினைச் சொல்
எதிர் மறுத்துணர்த்துதற் குரிமையு முடைத்தே. (தொல். சொல். ௨௪௪)


செப்பு வழுவமைதியைத் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். (தொல். சொல். ௧௪,௧௫). நேரடியாகச் செப்பு அமையாவிடினும், வினாப் பொருண்மையோடு பொருந்தியவிடத்து செப்பு வழுவன்று என்பதைத் தொல்காப்பியர் தெளிவாகச் சுட்டுகிறார்.வினாவும் செப்பாதலைத் தனி நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். இதனை 'வினாவெதிர் வினாதல்' எனும் செப்பின் வகையாக உரையாசிரியர்கள் கருதுவர். மேலும், வினா-விடை மரபில் சினையும் முதலும் தம்முள் மயங்கல் கூடா என்பதையும் தனி நூற்பாவில் (தொல். சொல். ௧௬) தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

செப்பு – வினா பற்றிய செய்திகள் கிளவியாக்கத்தின் ௧௩-௧௬ ஆகிய நூற்பாக்களில் மட்டுமின்றி, இவற்றைத் தொடர்ந்து வரும் ௨௮-௩௨, ௩௫-௩௮, ௪௦௦-௪௨, ௪௫, ௬௧ ஆகிய நூற்பாக்களிலும் அமைந்திருப்பதைத் தெய்வச் சிலையார் உரை வழி அறியலாம்.

வினா வழு காத்தலை நுதலிற்று (௩௧)
வினா வழுவமைதலை நுதலிற்று (௩௨)
ஒரு சார் செப்பு வழுகாத்தலை நுதலிற்று (௩௩)

தெய்வச்சிலையார் உரையில் காணப்படும் மேற்காணும் விளக்கங்கள்
கிளவியாக்கத்தின் பிற நூற்பாக்களிலும் செப்பு – வினா பற்றிய செய்திகள் காணப்படுவதைத் தெளிவாகச் சுட்டுகின்றன.

3.0 செப்பு – வினா வகைகள்
3.0.1 செப்பு வகைகள்

செப்பு வகைகளைப் பின்வருமாறு தொல்காப்பிய உரையாசிரியர்கள் வகைப்படுத்தி விளக்கியுள்ளனர்.

சேனாவரையர்
செவ்வன் இறை (நேரடி விடை)
எ-கா: 'உயிர் எத்தன்மைத்து' எனபதற்கு 'உணர்தல் தன்மைத்து' எனல்
இறை பயப்பது (வேறு வகையில் விடையிறுப்பது)
எ-கா: 'உண்டியோ' எனபதற்கு 'வயிறு குத்திற்று' எனல்

இளம்பூரணர்
வினா எதிர் வினாதல்
ஏவுதல்
உறுவது கூறல்
உற்றதுரைத்தல்
உடம்படல்
மறுத்தல்


தெய்வச்சிலையார்
துணிந்து கூறல்
கூறிட்டு மொழிதல்
வினாவி விடுத்தல்
வாய்வாளாதிருத்தல்

நச்சர்
செவ்வன் இறை
இறை பயப்பது
வினா எதிர் வினாதல்
ஏவல்
உற்றதுரைத்தல்
உறுவது கூறல்
உடம்படல்
மறுத்தல்
சொல் தொகுத்து இறுதல்
சொல்லாது இருத்தல்

கல்லாடர்
உடம்படல்
மறுத்தல்

3.0.2 வினா வகைகள்

இயற்கை மொழிகளில் அமையும் வினா வாக்கியங்களைப் பல்வகையாகப் பிரிக்கலாம் எனக் குறிப்பிடும் ரேட்போர்டு (Radford) எனும் அறிஞர் ஆங்கில வினா வாக்கியங்களை மூவகைப்படுத்துவர்.
Yes-No என விடையளிக்கக்கூடிய வினாக்கள், Wh- எனத் தொடங்கும் வினாக்கள், தொடரியல் பண்புகளில் ஒத்திருப்பதால்( Syntactic behavior )'How' என்னும் வினாவென் கிளவி ஆகியன முதல் வகை. எதிரொலிப்பு-எதிரொலிப்பு அல்லாத வினாக்கள் (Echo-Non Echo) இரண்டாம் வகை. தொல்காப்பியர் குறிப்பிடும் வினா எதிர் வினாதலை இவ்வகையுடன் ஒப்பு நோக்கலாம். நேரடி- நேரடியல்லாத வினாக்கள் மூன்றாம் வகை. முதலிரு வகைகள் மொழி அமைப்பு அடிப்படையிலும் சொற்பயன்பாட்டு அடிப்படையிலும் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் வினா வகைகளை மொழியைப் பயன்படுத்துவோர் சார்ந்து அமைத்திருப்பதைக் காணமுடிகிறது. ஓரிரு விடை வகைகளை மொழி அமைப்பு சார்ந்தும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் வகுத்துள்ளனர்.

வினா வகைகளைப் பின்வருமாறு தொல்காப்பிய உரையாசிரியர்கள் வகைப்படுத்தி விளக்கியுள்ளனர்.

சேனாவரையர்
அறியான் வினா
ஐய வினா
அறிபொருள் வினா

இளம்பூரணர்
அறியான் வினாதல்
ஐயம் அறுத்தல்
அறிவொப்பு காண்டல்
அவனறிவு தான் கோடல்
மெய்யவற்குக் காட்டல்

நச்சர்
அறியான் வினா
ஐய வினா
அறிபொருள் வினா

கல்லாடர்
அறியான் வினா
ஐயம்
அறிவொப்பு காண்டல்
அவனறிவு தான் கோடல்
மெய்யவற்குக் காட்டல்

இவ்வாறு பிற உரையாசிரியர்களும் பிற இலக்கண நூல்களும் சுட்டும் செப்பு வினா வகைகளையும் ஒப்பிட்டுக் காண இயலும்.

4.0 கருத்தாடல் நோக்கில் செப்பும் வினாவும்

வினா – செப்பு ஆகியவற்றுக்கிடையே அமையும் உறவை மொழி அமைப்பு உறவைக் கொண்டு மட்டும் விளக்குவது கடினம். இவ்வுறவைப் பொருண்மையியல், பயன்வழியியல் ஆகிய தளங்களிலேயே பல இடங்களிலும் விளக்க வேண்டியுள்ளது. இத்தகைய உறவு பெரும்பாலும் மொழி அமைப்பைக் கடந்ததாயும் தர்க்கங்களுக்கு உட்படாததாயும் அமைவதுண்டு.

செப்பு வகைகளைச் செவ்வன் இறை (நேரடி விடை), இறை பயப்பது (வேறு வகையில் விடையிறுப்பது) எனத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் வகைப்படுத்தி விளக்குவர். இறை பயப்பதாக அமையும் விடைகள் அவற்றுக்குரிய வினாக்களோடு ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளைக் கொண்டிருக்கின்றன. இவ்வுறவை மொழி அமைப்பு சார்ந்து தொடர்புபடுத்தி விளக்குவது கடினம். உடன்படல், மறுத்தல் போன்ற செப்பு வகைகளை ஓரளவிற்கு மொழி அமைப்பு சார்ந்து விளக்கிட இயலும். இது போன்றே, வினா எதிர் வினாதல் எனும் செப்பு வகையையும் மொழி அமைப்பு சார்ந்து விளக்கிட வாய்ப்பு உண்டு.

தெய்வச்சிலையார் குறிப்பிடும் 'வாய்வாளாவிருத்தல்' எனும் செப்பு வகை தனித்தன்மை வாய்ந்ததாகும். இது உடன்பாட்டுப் பொருளையோ அல்லது அதற்கு நேர் மாறான பொருளையோ உணர்த்தக்கூடும். பொருத்தமற்ற, பொருளற்ற வினாக்களுக்கு 'வாய்வாளாவிருத்தல்' விடையாக அமைவதுண்டு.
எ-கா: வினா: ஆகாயப்பூ நன்றோ தீதோ
விடை: .......................... (வாய்வாளாவிருத்தல்)
வடநூலார் ஒன்பதாவது மெய்ப்பாடாகக் குறிப்பிடும் 'சமநிலை' என்பதோடு இதனைத் தொடர்புபடுத்தலாம். இதனை மொழி அமைப்பு எல்லைக்குள் அடக்கி விளக்க இயலாது.

இது போன்றே, உற்றது கூறல் (எ-கா: உடம்பு நோகிறது) உறுவது கூறல்(எ-கா: உடம்பு நோம்) போன்ற செப்பு வகைகள் வினாக்களோடு கொள்ளும் உறவும் மொழி எல்லைகளைக் கடந்தாகவே உள்ளது.

வினா வகைகளைச் சுட்டும் உரையாசிரியர்கள், வினாவை அமைப்பு அடிப்படையில் விளக்காது, வினாவை எழுப்புபவர்களின் சமூகப் பின்னணி சார்ந்தே வகைப்படுத்தியுள்ளனர். 'இச்சூத்திரத்திற்குப் பொருள் யாது' எனும் வினாவை மாணவன் எழுப்பும்போது அறியா வினாவாகவும், ஆசிரியர் எழுப்பும்போது அறி வினாவாகவும் அமைகிறது. அறிவொப்பு காண்டல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக் காட்டல் ஆகிய வினா வகைகளும் கருத்தாடலின் சூழல், வினவுபவரின் சமூகப் பின்னணியைச் சார்ந்துள்ளன.

எனவே, வினாவும் செப்பும் அடுத்தடுத்து அமையும் நிலையில் அவற்றைப் பனுவலின் பகுதியாகக் கொண்டு அவற்றுக்கிடையே நிலவும் பல்வகைப்பட்ட உறவுகளைக் கருத்தாடல் முறையில் அணுகுவதற்குத் தொல்காப்பியரின் சிந்தனை வழிவகுக்கிறது. மேலும், பொருள்கோள், குளகம், நூலின் உத்திகள் போன்ற மரபிலக்கணக் கருத்தாக்கங்களையும் தொல்காப்பியச் செய்யுளியலில் இடம் பெற்றுள்ள வேறு சில கருத்தாக்கங்களையும் இவ்வகையில் விரிவாக ஆராய இயலும்.

துணை நின்றவை

இன்னாசி சூ.,சொல்லியல், 1985
சண்முகம் செ., கருத்தாடல், 2002
சிவலிங்கனார் ஆ.(ப.ஆ),தொல்காப்பியம் உரைவளம்-கிளவியாக்கம், 1982
ஜீன்லாறன்ஸ் செ.,(ப.ஆ),தொல்காப்பிய இலக்கண மொழியியல் கோட்பாடுகள், 2001
Andrew Radford Transformational Grammar, 1988
Karunakaran K. et.al. Tholkappiyar Conceptual Framework: Language, Literature, Society, 1992